Showing posts with label பிரஸ். Show all posts
Showing posts with label பிரஸ். Show all posts

December 17, 2010

வீட்டுமனை "விதி'ப்படிதானா?

பத்திரிக்கைத்துறை அரசின் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு ஊடகத்துறையால் ஏற்படுகிறது. இதன்காரணமாக அரசு பல்வேறு நலத்திட்டங்களை பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. தமிழகத்தில் பல நகரங்களில் பத்திரிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனைகளும் வழங்கப்பட்டுள்ளது. கோவையில் இந்த வீட்டுமனை சலுகையை பெற கடந்த பல ஆண்டுகளாக பத்திரிக்கையாளர்கள் போராடிவருகின்றனர். சாதாரண பத்திரிக்கையாளரால் கோவை போன்ற நகரங்களில்
மார்க்கெட் விலையில் வீட்டுமனை வாங்குவது என்பது குதிரை கொம்பு என்பதோடு, பத்திரிக்கையாளர் நகரில் வசிப்பது அவசியத் தேவை என்பதால் இந்த கோரிக்கை நியாயமானது என்றே நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்.
கோவை பத்திரிக்கையாளரின் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டு கடந்த பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியானது. கோவை பத்திரிக்கையாளர்கள் மத்தியிலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. எங்கு நிலம் அமையும், யார் யாருக்கெல்லாம் நிலம் கிடைக்கும் என்று ஒருவருக்கொருவர் பரபரப்பாக பேசும் டாபிக் ஆனது. குறைந்தது 5 ஆண்டு அனுபவம் உள்ள பத்திரிக்கையாளர்கள் தாங்கள் பணிபுரியும் பத்திரிக்கை அலுவலகத்திலிருந்து கடிதம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று மக்கள் தொடர்பு அலுவலர் அலுவலகத்தில் கேட்டு பெற்றனர்.
முதற்கட்டமாக 130 பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் பேச்சு இருந்தது.( எந்த விபரமும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.) முதல்வர் கருணாநிதி 12.12.2010 அன்று கோவை வருவதாக அறிவிக்கப்பட்டவுடன் 10.12.2010 அன்று அவசர அவசரமாக குறிப்பிட்ட சில பத்திரிக்கையாளர்களுக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் பட்டியலை மக்கள் தொடர்பு அதி காரி காண்பித்தார். அதில் மிகப்பெரிய ஆச்சரியம் தகுதியற்ற பலரும் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். பத்திரிக்கை ஆசிரியர்கள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர், வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று 161 பேர் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இவர்களிலிருந்து 130 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதற்காக 11.12.2010 அன்று குலுக்கல்(!) நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. பயனாளிகளை தேர்வு செய்ய தகுதியின் அடிப்படையில் பல வாய்ப்புகள் இருக்க, குலுக்கல் முறையில் தேர்வு செய்வது எப்படி சரியாக இருக்கும், அனுபவத்தை அடிப்படையாக கொண்டு தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
திட்டமிட்டப்படி குலுக்கல் நடந்து 130 ÷ பர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் தகுதியான பலருக்கு அதிர்ஷ்டமில்லை. குலுக்கல் முறையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், "20 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு இடம் கிடைக்கும் நிலை வந்துள்ளது. எதிர்ப்பு தெரிவித்தால் இடம் கொடுப்பதையே நிறுத்திவிடுவார்கள்' என்று சிலர் கருத்து தெரிவித்ததால் தீவிரம் காட்ட முடியவில்லை.
ஆனாலும் தவறு செய்பவர்களையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய பத்திரிக்கையாளர்கள் சம்மந்தப்பட்ட விவகாரத்தில் விதிமுறை மீறல்களை அனுமதிக்கலாமா என்ற மனஉளைச்சலும் ஏற்படாமல் இல்லை. கோவை பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கும் விவகாரத்தில் பின்வரும் கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை....
* பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை அளிக்கும் அரசு திட்டத்தில் பயனாளிகள் தேர்வுக்கு என விதிமுறைகள் ஏதும் இல்லையா?
* பயனாளிகள் தேர்வுக்கென அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் அடங்கிய குழுவை அமைக்காதது ஏன்?
*20 ஆண்டுகளாக கோவையில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்கள் குலுக்கல் என்ற முறையால் வெளியில் நிற்க, நேற்று வந்த பத்திரிக்கையாளர்களுக்கு மனை ஒதுக்கீடு செய்வது நியாயமா?
*வீட்டுமனை என்பது பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்தவா அல்லது சொத்து சேர்க்கவா?
*கோவையில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு முன்னுரிமை, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு கிடைக்காதவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படை தகுதியை புறந்தள்ளியது ஏன்?
*ஒரே குடும்பத்தில் பலருக்கு மனை ஒதுக்கீடு நியாயமா? அவர்கள் தனித்தனி வீடுகளில் வசிக்கப்போகிறார்களா?
*உண்மையாகவே மக்களிடம் செல்லும் பத்திரிக்கைகள், பெயரளவிற்கு நடக்கும் பத்திரிக்கைகள் என்ற வித்யாசம் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியாதா?
* பத்திரிக்கை என்று பதிவு செய்திருந்தாலே அவர்களுக்கு வீட்டுமனை என்றால், நூற்றுக்கணக்கான பதிவு பெற்ற பத்திரிக்கைகள் உள்ளனவே... அவற்றிற்கெல்லாம் வீட்டுமனை வழங்க கோவையில் இடம் உள்ளதா?
*அனுபவம் அடிப்படையில் 130 பேரை தேர்வு செய்துவிட்டு அனுபவம் குறைந்தவர்களுக்கு அடுத்த கட்டத்தில் கொடுப்பது தானே நியாயம்?
* உழைக்கும் பத்திரிக்கையாளர் சட்டத்தின் கீழ் பணிபுரிபவர்கள் தானே பத்திரிக்கையாளர்கள்?
*கோவை செய்தியை கவனிக்கிறார்கள் என்பதற்காக பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு நிலம் ஒதுக்க முன்வரும் மாவட்ட நிர்வாகம், சென்னையில் செயல்படும் பல நிறுவனங்களுக்கு கோவையில் நிருபர்கள் இல்லாமல் போன் மூலம் தகவல் பெற்று வெளியிடுகிறார்களே அவர்களுக்கெல்லாம் மனை ஒதுக்க மாவட்ட நிர்வாகம் முன்வருமா?
இன்னும் ஏராளமான கேள்விகள் பலரது மனதில் எழுந்துள்ளது. வருத்தங்களும் தான்....சிலர் நீதிமன்ற படியேறவும் தயாராகிவிட்டனர். பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை என்பது விதிமுறைப்படி ஒதுக்க வேண்டுமே தவிர, தலை"விதி'ப்படி ஒதுக்க கூடாது என்பதே என் நிலை.

December 3, 2010

பத்திரிகையாளர்களா? பவர் புரோக்கர்களா

ஆங்கிலம் பேசும் பர்கா தத் போன்ற டில்லி பத்திரிக்கையாளர்களின் "பணவேட்டை' ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான விவகாரங்களில் சந்தி சிரிக்கின்றது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை வெளியிடாமல் இருக்க பல நேஷனல் மீடியாக்கள் "லாபம்' பார்த்த விவகாரமும் தற்போது வெளியே வந்து கொண்டிருக்கிறது. மீடியாக்களில் நடக்கும் கேவலங்களை மீடியாக்கள் தான் வெளியிட வேண்டும் என்பதை உணர்ந்த சில பத்திரிக்கைகள் தற்போது இவற்றை வெளிச்சமிட்டு வருகின்றன. இதையொட்டி தமிழக அரசியல் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையை அனைவரும் படித்தேயாக வேண்டும்..... இதே உங்கள் பார்வைக்கு...!
பத்திரிகையாளர்களா? பவர் புரோக்கர்களா?
என்.டி.டி.வி என்ற பிரபலமான சேனலின் தலைமைப் பொறுப்பில் உள்ள பர்கா தத் மற்றும் இந்துஸ்தான் டைம்ஸ் என்ற பிரபல பத்திரிகையின் எடிடோரியல் இயக்குனர் வீர் சங்வி உள்ளிட்ட பலர் மீதும் எழுந்துள்ள குற்றச்சாட்டால் ஜனநாயகத்தின் நான்காவது தூண் நாறிப் போய்கிடக்கிறது. தேசிய அரசியலைக் கலங்கடிக்கும் தற்போதைய ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் உள்ளுக்குள் போகப்போக நிறைய இடங்களில் மர்ம முடிச்சுகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் ஒரு சில மர்ம முடிச்சுக்கள் மீடியா உலகத்தின் ஜாம்பவான்களாக பொதுமக்களிடம் தினந்தோறும் பேச்சாலும் எழுத்தாலும், தங்களை அறிவுஜீவிகளாகவும், யோக்கிய சிகாமணிகளாகவும் காட்டிக் கொண்டே உலவி வரும் ஒருசில கருப்பு ஆடுகளை, இப்போது வெளியுலகத்துக்கு தெரிய வைக்கும் புண்ணியத்தை ஸ்பெக்ட்ரம் செய்துள்ளது. பெயர் நீரா ராடியாவாம். இவர்தான் இப்போது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆல் இந்தியா ரேடியோ. வயது 50 ப்ளஸ். பிரிட்டனை சேர்ந்த என்.ஆர்.ஐ. தொழில் கார்ப்பரேட் லாபிஸ்ட். புரியும்படி சொன்னால், பெரும் பணக்கார தொழில் நிறுவனங்களுக்கு புரோக்கர் வேலை பார்ப்பவர். கார்ப்பரேட் நிறுவனங்கள் எல்லாமே அரசு மற்றும் அதிகார வர்க்கத்திற்குள் ஊடுருவி காரியம் சாதிப்பதற்காக சம்பளம் கொடுத்து ராடியா போன்ற ஆட்களை வேலைக்கு வைத்துக் கொள்வதுண்டு. தாங்கள் விரும்பியதை செய்து முடிக்க எந்த வழிகளையும் மேற்கொள்ளத் தயங்காத தைரியசாலிகள் இவர்கள். அரசியல்வாதிகள், அதிகாரிகள் என அதிகார வட்டாரங்களில் இவர்களுக்கு இருக்கும் சகட்டுமேனி தொடர்புகளை வைத்து, அரசின் கொள்கைகள், விதிமுறைகளையே கூட மாற்றி காரியம் சாதிப்பார்கள். அரசியல், அரசாங்கம் ஆகியவற்றோடு எப்போதும் ஒட்டிக்கொண்டே நிற்பவர்கள் பத்திரிகையாளர்கள். அதிகார மையங்களுக்குள் எளிதில் நுழைந்து திரும்பும் ஆற்றல் மீடியாக்காரர்களுக்கு உண்டு. எனவே, மீடியாக்காரர்களையும் தங்களது காரியங்களுக்கு இதுபோன்று தரகர்களாக பயன்படுத்திக் கொள்வதுண்டு. இதனாலேயே, டெல்லி பத்திரிகையாளர்களில் பலரும் புரோக்கர் தொழிலையும் சீக்ரெட்டாக செய்து வருகின்றனர் என்பதும் பலரும் அறியாத செய்தி. இதுகூட, காலம் காலமாக நடைமுறையில் இருந்து வரும் ஒன்றுதான். இத்தனை நாட்கள் இருட்டுக்குள் இருந்தது. இப்போது ராடியா மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2009&ம் ஆண்டு மே, ஜூலை மாதங்களில் மட்டும் 104 முறை வருமானவரி இலாகாவால் ராடியாவின் போன் டேப் செய்யப்பட்டுள்ளது. அதில், யார் யாருடன் பேசினார் என்னென்ன பேசினார் என்ற விவரங்களை, ‘ஓப்பன் மேகசின்’ என்ற இணையதள பத்திரிகையும் ‘அவுட்லுக்’ இதழும் வெளியிட்டுள்ளன. ஒரு சிலரைத் தவிர வெகுஜன பத்திரிகைகள் எதுவுமே இதை செய்தியாக்கவில்லை. ராடியாவின் புரோக்கர் வேலைக்கு ஒத்து ஊதியதும் உதவி செய்ததும் முக்கிய பத்திரிகையாளர்கள் என்பதால், தனது சாதியைக் காட்டிக் கொடுக்க விரும்பாததே இதற்கு காரணம். ஆனாலும், இந்த டேப்பை ஸ்பெக்ட்ரம் வழக்கிற்காக வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். ஆங்கில ஏட்டிலேயே இந்த தகவல் வந்துள்ளது என்று சில அரசியல்வாதிகள் மேற்கோள் காட்டுவதுண்டு. ‘ஆங்கில மீடியா என்றாலே அறிவாளிகளும் உண்மை விளம்பிகளும் மட்டுமே ஜீவிக்கக் கூடிய இடம்’ என்ற குருட்டு நம்பிக்கைகாரர்கள் இந்நாட்டில் நிறைய உண்டு. ஆனால், சரளமான ஆங்கிலத்தில் நாட்டு நடப்புகளை எல்லாம் தொண்டை வலிக்க தினமும் பேசும் பர்கா தத்தும், காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக மட்டுமே பேனாவை வளைத்து வளைத்து எழுதும் கட்டுரையாளர் வீர் சங்வியும் இந்த புரோக்கர் நீரா ராடியாவிடம் பேசும் பேச்சுக்களை வைத்துப் பார்த்தால் இவர்கள் பத்திரிகையாளர்களா இல்லை பவர் புரோக்கர்களா என்ற கேள்வியே எழுகிறது. உரையாடலை வைத்து பார்க்கையில், சர்வ சாதாரணமாக அதிகார வளையத்திற்குள் ஊடுருவும் வல்லமையைப் பெற்றுள்ளார் இந்த ராடியா. தான் விரும்பும் தகவலை உரிய நபருக்குக் கொண்டுபோய் சேர்க்கும் வேலையை பர்கா தத் மூலம் செய்கிறார். அதைவிட மிகப்பெரிய கட்டுரையாளராக கருதப்படும் வீர் சங்விக்கு, அவர் எழுதப்போகும் கட்டுரையில் என்னென்ன பாயின்ட்ஸ் வர வேண்டுமென்று டிக்டேட் செய்கிறார் ராடியா. இன்னும் பல முக்கிய மீடியா உலக ஜாம்பவான்கள் ராடியாவுடன் தொடர்பில் இருந்துள்ளது உரையாடலில் தெரிகிறது. ஏராளமானோர் ராடியாவின் ‘பே ரோலில்’ இருப்பதாகக்கூட ஒரு தகவல் உண்டு. ராடியாவும் பல முக்கிய பத்திரிகையாளர்களும் பேசும் அந்த உரையாடல், யூ டியூப்பில் வெளியான சில தினங்களில் மாயமாய் மறைந்துவிட்டது. அந்தளவுக்கு இந்த கும்பலுக்கு செல்வாக்கு. டெலிகாம் இலாகா-விற்கு யார் வரவேண்டும் யார் வரக்கூடாது என்பதை, இந்த கார்ப்பரேட் மீடியா கூட்டணி முடிவு செய்கிறது அந்த டெலிபோன் உரை-யாடலில். ராடியாவுக்கு பக்கபலமாக இந்த பத்திரிகையாளர் செய்யும் ‘பவர்’ புரோக்கிங் நிச்சயமாக முகம் சுளிக்க வைக்கும் ரகமே. அரசாங்கத்தில் யார் யார் அமைச்சர்களாக வர வேண்டுமென்பதை பிரதமர்தான் முடிவு செய்வார் என்று அரசியல் சட்ட தார்மீக நெறி கூறுகிறது. ஆனால், அரசாங்கத்தில் யார் யார் அமைச்சர்களாக ஆக வேண்டுமென்பது குறித்தும் அவர்களுக்கு என்னென்ன இலாகாக்கள் தரப்பட வேண்டுமென்றும் இந்நாட்டின் மிகப்பெரும் கார்ப்பரேட் கம்பெனி தரகர்களும், மீடியா உலகத்தின் முக்கிய பத்திரிகையாளர்களும் சேர்ந்து முடிவு செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது என்பதே ‘நீரா ராடியா எபிஸோட்’ உணர்த்தும் பாடம். ‘கழகத்தின் சார்பில் யார் யார் அமைச்சரா-வார்கள் என்பதை கட்சியின் உயர்மட்டக்குழு கூடி முடிவெடுக்கும்...’ என்றெல்லாம் இனி வார்த்தைகளைக் கேட்கும் போது ஈயத்தைக் காய்ச்சி காதில் ஊற்றியது போலத்தான் இருக்கும் நமக்கு. வழக்கம் போல அதையும் தாங்கிக் கொள்ளவேண்டியதுதான்!
Thanks to Tamilagaarasial

November 22, 2010

எழுத்தும் தெய்வம்..

பத்திரிக்கையாளர்களின் இன்றைய நிலை குறித்து தெளிவான தலையங்கம் ஒன்றை தினமணி இன்று எழுதியுள்ளது. அனைத்து பத்திரிக்கையாளர்களும், வாசகர்களும் படிக்க வேண்டிய தலையங்கம் இது.... அதனால் உங்கள் பார்வைக்கு..
மக்களாட்சித் தத்துவத்தில் மிகப்பெரிய பங்கு வகிப்பது கருத்துச் சுதந்திரம். கருத்துச் சுதந்திரத்தின் பிரதிநிதிகளாகக் கருதப்படுபவர்கள் பத்திரிகையாளர்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் சரி, இரண்டாவது சுதந்திரப் போர் என்று வர்ணிக்கப்படும் அவசரநிலைச் சட்டப் பிரகடன காலகட்டத்திலும் சரி, பத்திரிகைகள் ஆற்றியிருக்கும் பங்கு அளப்பரியது.

தேசத்தின் பொருளாதாரத்தை வேரோடு சாய்க்கும் ஊழல்களை வெளிக்கொணர்ந்து பல தவறுகள் திருத்தப்படவும், தவறிழைத்தவர்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்படவும் பத்திரிகைகள் ஆற்றியிருக்கும் பணி ஒன்றிரண்டல்ல. சுதந்திர இந்திய சரித்திரத்தின் முதல் ஊழல் என்று வர்ணிக்கப்படும் முந்திரா ஊழலில் தொடங்கி, இப்போதைய 2-ஜி "ஸ்பெக்ட்ரம்' அலைக்கற்றை ஊழல்வரை, பல முறைகேடுகளை வெளிக்கொணர்ந்த பொறுப்புணர்வு நிச்சயமாகப் பத்திரிகைகளுக்கு உண்டு.

எந்தவித சுயநல நோக்கமும் இல்லாமல், மக்கள் மத்தியில் பயமோ, வெறுப்போ இல்லாமல் பழகக்கூடிய வாய்ப்பும் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே உண்டு. அதனால்தான், குடியரசுத் தலைவராலும், மாநில ஆளுநர்களாலும் பத்திரிகையாளர்களில் ஓரிருவர் அடையாளம் காணப்பட்டு மாநிலங்களவைக்கும், மேலவைக்கும் உறுப்பினர்களாக்கப்படுகின்றனர். மக்களோடு மக்களாகப் பழகும் இந்தப் பத்திரிகைப் பிரதிநிதிகள் மக்களின் நிஜமான பிரச்னைகளை எடுத்துரைக்கவும், ஆட்சியாளர்களுக்கு வழிகாட்டவும் முடியும் என்பதால்தான் இத்தகைய ஒதுக்கீடு நமது அரசியல் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

அதேநேரத்தில், பத்திரிகையாளர்கள் என்கிற போர்வையில், நிருபர்களுக்குத் தரப்படும் மதிப்பையும், மரியாதையையும் பயன்படுத்தி, தவறான வழிமுறைகளில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது என்பதை நாம் எப்படி மறுப்பது? "எழுத்தும் தெய்வம், எழுதுகோலும் தெய்வம்' என்று பத்திரிகைப் பணியை ஒரு தவமாக, சமுதாயப் பணியாகக் கருதிப் பணியாற்றுபவர்கள் மத்தியில், எழுத்தைப் பிழைப்பாக்கி, பத்திரிகையாளர்கள் என்கிற போர்வையில் செயல்படும் இடைத்தரகர்களும் பலர் மலிந்துவிட்டனர் என்கிற உண்மையை மறைத்துவிடவா முடியும்?

அரசியல்வாதிகள் மத்தியில் சேவையுணர்வு குறைந்து, பணம், பதவி, அதிகாரம் போன்றவைகளின் மீது மோகம் ஏற்பட்டு விட்டிருப்பதைப் போன்று, அதிகார வர்க்கத்தினர் மத்தியில், தாங்கள் மக்கள் சேவைக்காக மாதச் சம்பளத்துக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஊழியர்கள் என்கிற எண்ணம் மறைந்து ஊழலுக்கு உதவிக்கரம் நீட்டும் போக்கு அதிகரித்திருப்பது போன்று, குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் நீதிபதிகள் மக்கள் மன்றத்தின் முன்னால் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுவது போன்று, பத்திரிகையாளர்கள் மத்தியிலும் எழுத்துப் பணிக்குத் தொடர்பே இல்லாதவர்கள் பலர் எழுத்தாளர்களாகவும், பத்திரிகையாளர்களாகவும் உலவுகிறார்கள் என்பதும், இடைத்தரகர்களாகச் செயல்படுகிறார்கள் என்பதும் நிஜம்தானே!

சமுதாயப் பங்களிப்பாற்ற வேண்டும் என்கிற குறிக்கோளோடும், இலக்கியப் பணியாற்ற வேண்டும் என்கிற தாகத்துடனும் பத்திரிகை நடத்துபவர்கள் இருக்கிறார்கள். பல சிற்றிதழ்களும், தினசரிகளும்கூட இந்தப் பட்டியலில் அடக்கம். அதேநேரத்தில், அதிகார வர்க்கத்துடனும் அரசியல்வாதிகளுடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அந்தத் தொடர்பின் மூலம் வயிற்றுப் பிழைப்பு நடத்துவதற்கும் ஒரு கூட்டம் தயாராகிறதே, அதை எப்படித் தடுத்துவிட முடியும்?

சமீபகாலமாக, காவல்துறை மற்றும் நிர்வாகத்தில் காணப்படும் குறைகளைச் சுட்டிக்காட்டி மக்கள் உரிமைக்காகப் போராடும் பத்திரிகைகள் குறைந்து, நிருபர்கள் என்கிற போர்வையில் வியாபாரிகளின் சார்பிலும், சமூக விரோதிகளின் சார்பிலும், தவறுகளுக்குத் துணைபோகத் தயாராக இருக்கும் காவல்துறையினர், அரசு அதிகாரிகள் போன்றோருடன் கூட்டணி ஏற்படுத்தி, அதில் குளிர்காயும் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதை வேதனையுடன் வேடிக்கை பார்க்க முடிகிறதே தவிர, இவர்களை வடிகட்டவோ, விலக்கி நிறுத்தவோ முடியாதே, என் செய்ய?

மாவட்ட அளவில் இப்படி ஒரு நிலைமை இருந்ததுபோய், மாநில அளவிலும் தேசிய அளவிலும்கூட இந்தப் போக்கு, கடந்த இருபது ஆண்டுகளாக, மலிந்துவிட்டிருக்கிறது. சந்தைப் பொருளாதாரம் என்கிற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களின் வரவும், "கார்பரேட்' கலாசாரத்தின் தாக்கமும், பத்திரிகையாளர்களை அரசியல் இடைத்தரகர்களாக மட்டுமல்லாமல், சமூக விரோதிகள், வர்த்தக நிறுவனங்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் கூட்டணியில் இன்றியமையாத அங்கமாக மாற்ற முற்பட்டுவிட்டது. இதன் வெளிப்பாடுதான் இப்போது வெளியாகி இருக்கும் நீரா ராடியா தொலைபேசி உரையாடல்.

பொதுநல வழக்கு மையம் என்கிற சமூக ஆர்வலர் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் இந்தத் தொலைபேசி உரையாடல்களின் தொகுப்பு வருமானவரி இலாகாவினரால் ஒட்டுக்கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட ஒட்டுக்கேட்ட தொலைபேசி உரையாடல்களுக்கு நீதிமன்றத்தில் மரியாதை தரப்படுவதில்லை என்பது ஒருபுறமிருக்க, இதில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படுபவர்கள் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற பத்திரிகையாளர்கள் என்பதுதான் நமக்கு வேதனை அளிக்கும் விஷயம்.

பிரதமர் மீது படிந்திருக்கும் களங்கத்தையும், ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும் ஊழல்களையும் திசைதிருப்ப, "அவுட் லுக்', "ஓபன்' போன்ற பத்திரிகைகளையேகூட விலைபேசி ஊழலில் தொடர்புடையவர்கள் இதுபோன்ற பரபரப்புச் செய்திகளை வெளியிட்டிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். அதேநேரத்தில், சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்பதுபோல, பத்திரிகையாளர்களும் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்தாக வேண்டும்.

சிதைந்துவரும் மக்கள் மன்றத்தின் நம்பிக்கைக்கு நடுவில் இருக்கும் வெள்ளி ரேகை பத்திரிகைகளும், பத்திரிகையாளர்களின் நேர்மையும்தான். அதுவும் சிதைந்துவிட்டால் இந்தியாவைக் குழப்பமும் பேராபத்தும் சூழ்ந்துவிடும். பத்திரிகையாளர்கள் இடைத்தரகர்களாகிவிடக் கூடாது!------------22-11-2010
தினமணி
-

August 18, 2010

வில்லங்கவரி

சக பத்திரிக்கையாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட சுவராஸ்யமான அனுபவங்களை கூறினார்கள். அவற்றில் இரண்டு மட்டும் இங்கே... *ஒரு ஆண்டு ஆகிறது அந்த சம்பவம் நடந்து. கோவை மாநகரில் நோ பார்க்கிங் பகுதியில் ஒரு பெண்மணி காரை நிறுத்தினார். கடமைவீரர்களாக சென்ற காவல்துறை காரின் சாவியை பறித்துக் கொண்டது. காரின் சாவியை திரும்ப பெற அந்த பெண்மணி போராடியும் பலனில்லை. இந்த தகவல் நிருபர்களை எட்ட, நிருபர் படை அங்கே விரைந்தது.
ஒரு மணிநேர போராட்டம், நிருபர்களின் வருகை இவற்றிற்கு பின்னர் காரின் சாவியை மீட்டுத்திரும்பினார் அந்த பெண்மணி. அடுத்த நாள் அனைத்து பத்திரிக்கைகளிலும் இது செய்தியாக வெளிவந்திருந்தது. அனைத்து நாளிதழ்களிலும் ஒரே மாதிரி செய்தி வந்திருக்க... ஒரு நாளிதழில் மட்டும் கார் பெண்மணியின் மீது பரிதாபத்தை ஏற்படுத்தும் விதமாக ஒரு வரி சேர்க்கப்பட்டிருந்தது. அந்த செய்தியை படித்ததும் கார் பெண்மணி கொதித்து போனார். தனது தந்தையை அழைத்துக் கொண்டு, செய்தி வெளிவந்த அனைத்து பத்திரிக்கைகளுடன் குறிப்பிட்ட நாளிதழின் அலுவலகத்திற்கு சென்று செய்தி ஆசிரியரைச் சந்தித்து இப்படி எழுதிவிட்டீர்களே.... என்று கோபத்துடனும், அழுகையுடனும் அவர் சண்டைக்கு போனார். அவருடன் வந்த அவரது தந்தையின் கண்களிலும் தாரை தாரையாக கண்ணீர். என்ன நடந்தது என்று செய்தி ஆசிரியருக்கு புரியவில்லை.
சம்மந்தப்பட்ட நிருபரை வரவழைத்தார். விசாரணை நடந்தது. "சார் நான் ஸ்பாட்டிற்கு சென்று தான் எழுதினேன். இதில் தவறு ஏதும் இல்லை' என்றார் அந்த நிருபர். "ஐயா என் மகள் கணவனை பிரிந்து 3 ஆண்டுகளாகிறது. இந்த நிலையில் இப்படி எழுதலாமா? என் மகள் மீண்டும் கணவனுடன் சேர்ந்து வாழ முடியாதபடி செய்துவிட்டீர்களே...' என்று தந்தை புலம்ப... அப்போது தான் நிருபருக்கு இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று புரிந்தது. "கார் சாவியை பெற ஒரு மணிநேரம் போராடிய அந்த பெண்மணி கர்ப்பிணி என்பது குறப்பிடத்தக்கது...' என்ற வரி தான் வில்லங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நிருபருக்கு புரிந்து போனது. எடிட்டரும் மறுப்பு செய்தி வெளியிடுவதாக சமாதானப்படுத்தி அவர்களை அனுப்பி வைத்துவிட்டு நிருபரை பிடிபிடியென பிடித்துக் கொண்டார். "சார், அந்த பெண்ணிற்கு வயறு பெரிதாக இருந்தது அதனால் தான் கர்ப்பிணி என்று நினைத்து எழுதிவிட்டேன்...' என்று நிருபர் கூறிய விளக்கத்தை எடிட்டர் ஏற்றுக் கொள்ளவில்லை. " நீ, ஏன் வயிற்றை பார்த்து எழுதுகிறார். செய்தி எடுக்கச் சென்றால் முகத்தை மட்டும் பார்த்து செய்தி எழுது...' என்று நீண்ட அட்வைஸ் கொடுத்து நிருபரை வறுத்தெடுத்தார்.
* கோவை முன்னாள் மேயர் ஒருவர் இமாச்சலபிரதேசத்திற்கு அலுவல் ரீதியான சுற்றுப்பயணத்தை முடித்து திரும்பினார். அவரை நிருபர் ஒருவர் போனில் தொடர்பு கொண்டு பயணம் எப்படி இருந்தது என்று கேட்க.... அந்த நிருபருடன் நன்கு பழக்கம் வைத்திருந்த மேயரும், இந்த பயணமே வேஸ்ட், லட்சக்கணக்கில் பணம் செலவானது தான் மிச்சம் என்று உண்மையை மறைக்காமல் கூறிவிட்டார். அப்புறம் என்ன நிருபரும், மேயரின் இமாச்சல பயணம் வேஸ்ட் என்று எழுதிவிட்டார். அவ்வளவு தான் மேயர் கிளம்பி நேராக நாளிதழ் அலுவலகத்திற்கு வந்துவிட்டார். எங்கோ அசைன்மென்டிற்கு சென்றிருந்த அந்த நிருபர் உடனடியாக வரவழைக்கப்பட்டார். எடிட்டர் முன்பு விசாரணை நடந்தது. "மேயர் தான் இதைக் கூறினார்... அதனால் எழுதினேன்...'இது நிருபர். "அவர் கூறினால், அதை அப்படியே எழுதிவிடுவதா?'இது எடிட்டர். "இவர் எழுத வேண்டாம் என்று கூறவில்லை'நிருபர். "நான் எழுதும்படி கூறவில்லை'மேயர். "என்னையா நீ செய்தி எழுதுகிறாய்... இரண்டு நாள் செய்தி எடுக்க செல்லவேண்டாம்...' இது எடிட்டர் அளித்த தண்டனை. "சில நேரங்களில் உண்மையை எழுதினாலும் தவறு தான்..' இது நீதி!

June 11, 2010

நிருபருக்கு பத்து அல்லது பதினைந்து சதவீதம்

கௌரவம் கட்டுரையை படித்துவிட்டு சக நிருபர் ஒருவர் சம்மந்தப்பட்டவர்களின் பெயர்களை குறிப்பிட்டு கடிதம் ஒன்றையும், ஆடியோ ஒன்றையும் அனுப்பியுள்ளார். அதை உங்கள் பார்வைக்கு இங்கே வெளியிட்டுள்ளேன்.. பத்திரிக்கையாளர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் நடந்து கொண்டவிதம் குறித்த தங்கள் மடலைக் கண்டேன்.மிரட்டலின் மூலம் மட்டுமே மரியாதையைப் பெற்றுக் கொள்வது-அல்லது.பறித்துக் கொள்வது என்பது சில பத்திரிக்கையாளர்களின் வாடிக்கையாக உள்ளது என்பது வேதனையளிக்கிறது. ஆனால்,இன்னும் சில பத்திரிக்கையாளர்கள் இதைவிட மோசம்..மரியாதையைப் பெறுவதற்காக மிரட்டுவது என்பது மட்டுமல்ல,மாமூலைப் பெறுவதற்காகக் கூட,மிரட்டுகிறார்கள் என்பதும் நடைமுறையில் உள்ளது. சாட்சிக்காக இத்துடன் ஒரு ஆடியோவை அனுப்பியுள்ளேன்.கேட்டுவிட்டு அதிர்ச்சியடையுங்கள் அல்லது வேதனைப்படுங்கள்..,அதோடு நிற்காமல் இது குறித்த உங்கள் கருத்துக்களை தங்கள் வலைப்பூவில் கடுமையாக பதிவு செய்யுங்கள். உரையாடலின் மேலோட்டமான விபரம்., பொள்ளாச்சியிலுள்ள அனைத்துக் காவல்நிலையங்களிலும்,மாதமானால் ஒன் டீ-அதாவது ஒரு ஆயிரம் ரூபாய் தந்துவிடுகிறார்களாம்.ஆனால் பெரிய அளவில்,திருட்டுப்போன நகைகள் அல்லது பொருட்களைப் போலீசார் கண்டுபிடித்து,அதற்குரியவர்களிடம் ஒப்படைக்கும்போது,குறிப்பிட்ட சதவீதம் பொருளாகவோ,பணமாகவோ,போலீசார் எடுத்துக்கொள்வது வாடிக்கையாக உள்ளமாகவும்,அதிலிருந்து ............... நாளிதழ் நிருபருக்கு பத்து அல்லது பதினைந்து சதவீதம் மாமூல் தரவேண்டுமாம்.காவல்துறை அதிகாரிகளின் சம்பளத்தை ஏ.டி.எம்.மிலிருந்து எடுத்துதரச் சொல்லவில்லையாம் அந்த நிருபர்.போலீசாரின் மீதுள்ள கருணையால்,அள்ளித்தரவேண்டாம் கிள்ளித்தாருங்கள் என்று கேட்கிறார்.அது வேண்டுகோளா..? அல்லது மிரட்டலா..,,? என்று இதற்குப்பின் நடைபெற்ற உரையாடலின் துணையோடுதான் கண்டுபிடிக்கமுடியும். வேண்டுகோள்..! போலீசார்தான் மாமூல் வாங்குவது வாடிக்கையான ஒன்று.ஆனால் போலீசாரிடமே மாமூல் வாங்குவது என்பது..அடேங்கப்பா..நினைத்துப்பார்த்தால்,திகைப்பாக இருக்கிறது. இதனைக்கேட்டு விட்டு,பிரபல பத்திரிக்கையின் பொள்ளாச்சி நிருபர் ..................இங்குள்ள சப்இன்ஸ்பெக்டர் .................என்பவரோடு நடத்திய உரையாடலை-பெயரைக்குறிப்பிடாமல்,பூடகமாக-செய்தியாக வெளியிட்டாலும் சரி. கிருமிகளை ஒழிப்பதை கூடுமானவரை நாமும் செய்யவேண்டும் என்பதே எனது ஆவல். அன்புடன்.....********** ........................

June 10, 2010

கௌரவம்!

கோவையில் இன்று(10.6.2010) நடந்த பத்திரிக்கையாளர்கள் தொடர்பான இரு வேறு சம்பவங்களை பகிர்ந்து கொள்கிறேன். சம்பவம் 1.:கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செம்மொழி மாநாடு விருந்தோம்பல் குழுவின் கூட்டம் உணவுத்துறை அமைச்சர் ..வேலு தலைமையில் நடந்தது. 5 நிமிடம் போட்டோ எடுக்க மட்டும் வந்தால் போதும் என்று பத்திரிக்கையாளர்களுக்கு அழைப்பு வந்திருந்தது. போட்டோ எடுக்கச் சென்ற பத்திரிக்கையாளர்கள் பணியை முடித்து அரங்கை விட்டு வெளியேறும் போது கூட்டத்தில் கலந்து கொள்ளும் அதிகாரிகளுக்கு வழங்க டீஸ்னேக்ஸ் தயாராக இருந்தது. சில பத்திரிக்கையாளர்கள் ஆர்வத்துடன் டீ குடிக்க (அழைக்காமலேயே) சென்றனர். அங்கிருந்தவர்களோ உங்களுக்கு டீ கிடையாது என்று முகத்தில் அடித்தாற்போல கூறி விரட்ட டீ விரும்பிய பத்திரிக்கையாளர்கள் முகத்தில் ஆடவில்லை. இதைப்பார்த்த உதவி மக்கள் தொடர்பு அதிகாரி பத்திரிக்கையாளர்களை அங்கிருந்து அழைத்துச்சென்று நிலமையை சமாளித்தார். சம்பவம் 2.:கோவை புறநகர் மாவட்ட காவல் நிலையம் ஒன்றிற்கு பிரபல வாரப்பத்திரிக்கைகளைச் சேர்ந்த இரண்டு நிருபர்கள் சென்றனர். அங்கிருந்த சப்இன்ஸ்பெக்டர் இருவரையும் அழைத்து அன்புடன் அமரவைத்து பேசினார். ஏனோ அவசர அவசரமாக இரு நிருபர்களும் வெளியே கிளம்பி சென்றுவிட்டனர். அவர்கள் சென்ற இரண்டாவது நிமிடத்தில் சப்இன்ஸ்பெக்டரின் செல்போன் அலறியது. அதில் பேசியவர் சற்று முன் வந்து சென்ற நிருபர்களில் ஒருவர். "யோவ்.... நீ என்ன பெரிய .ஜியா? முன்னணி பத்திரிக்கையைச் சேர்ந்த நிருபர்கள் வந்திருக்கோம். உட்கார்ந்துகிட்டே கை குலுக்குற.... எங்களைப்பத்தி உனக்குத் தெரியுமா? ஐஜி கிட்ட பேசி உன்னை உண்டு இல்லைனு செஞ்சுடுவோம்....' நிருபர்களின் இந்த அதிரடி எஸ்ஐயை கலங்க வைத்துவிட்டது. தான் செய்தது தவறா சரியா என்றும் கூட தெரியாமல், .ஜி தன் மீது எடுக்கும் நடவடிக்கை குறித்தே அவரது கவலை இருக்கிறது. மேற்காணும் சம்பவங்களில் இருந்து இரண்டு கேள்விகள் எனக்கு எழுகிறது.... கவுரவம், மரியாதை என்பது நமது நடத்தையின் மூலம் கிடைப்பதா அல்லது மிரட்டி பெறுவதா?

May 15, 2010

உளவுத் "திணறல்'

கோவை போலீசார் மத்தியில் கடந்த வாரம் பரபரப்பாக பேசப்பட்ட சம்பவம் இது. கல்லூரி மாணவர் ஒருவர் தன் வீட்டு விசேஷத்திற்கு வந்தவர்களுடன் "உற்சாக பானம்' ஏற்ற (நாட்டில் இருப்பவர்கள் அனைவருமே இனி "குடி' மகன்கள் தான் போலும்) பார் ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது ஏற்கனவே அங்கு மது மயக்கத்தில் இருந்த கும்பல் ஒன்றிற்கும் கல்லூரி மாணவர் கும்பலுக்கும் மோதல், இதில் கல்லூரி மாணவருக்கு விரட்டி விரட்டி "மாத்து' விழுந்துள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர போலீசார் வழக்கம் போல இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தலையில் பலத்த காயம் அடைந்து 5 தையல்கள் வரை போடப்பட்ட கல்லூரிமாணவரும், அவரை துவைத்து எடுத்தவர்களும் "சமாதான' ஒப்பந்தத்தில் கையெழுத்திட, வழக்கு ஏதும் பதியாமல் தங்கள் கடமையை போலீசார் முடித்துக் கொண்டனர். ஆனால் அடுத்த நாள் பத்திரிக்கைகளை பார்த்த போலீசாருக்கு வியர்த்துவிட்டது. நடந்த சம்பவங்கள் அத்தனையும் நேரடி விளக்கமாக பத்திரிக்கையில் வெளிவந்ததுடன், கொலை வெறி தாக்குதல் நடந்துள்ள போதும் சமாதான உடன்படிக்கைக்கு போலீசார் ஏற்பாடு செய்தது எப்படி என்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருந்தது. இதைப்பார்த்த கமிஷனர் சைலேந்திரபாபு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து கடுமையாக கண்டித்து வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். இதன்பின்னர் தான் உளவுத்துறையினர் களம் இறங்கினர். நடந்தது என்ன என்று விசாரிப்பதற்கு பதில், நடந்த சம்பவம் எப்படி பத்திரிக்கைகளில் செய்தியானது என்பதை கண்டுப்பிடிக்கவே அதிக ஆர்வம் காட்டினர். ஒரு வழியாக கண்டே பிடித்துவிட்டனர். லோகு என்பவர் அந்த நேரத்தில் பாரில் இருந்ததாகவும், அவர் தான் நடந்த சம்பவங்கள் முழுவதையும் தனது செல்போன் கேமராவில் படம் பிடித்துள்ளதாகவும் உளவுப்பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அவர் பத்திரிக்கையாளராக இருக்கவும் வாய்ப்புள்ளது என்பது கூடுதல் தகவல். உடனே போலீசார் பரபரப்பானார்கள். பத்திரிக்கையாளர்களின் போன் விபரங்கள் அடங்கிய "கோவை டைரியை' கையில் எடுத்த உளவு அதிகாரிகள், அதில் பிரபல வார இதழின் சீனியர் ரிப்போர்ட்டர் ஒருவரின் பெயர் லோகநாதன் என்றிருப்பதைக் "துப்பறிந்து' கண்டுப்பிடித்தனர். உடனே கமிஷனருக்கு அதுகுறித்து ரிப்போர்ட் போடப்பட்டது. ஏதேச்சையாக இந்த விபரம் ஒரு பத்திரிக்கையாளர் மூலம் சம்மந்தப்பட்ட நிருபரின் கவனத்திற்கு வந்தது. "பார்' செல்லும் பழக்கம் இல்லாத அந்த நிருபர் அதிர்ந்து போய் துணைக்கமிஷனர் ஒருவரிடம் நேரடியாகவே உளவுத்துறையின் "துப்பறிதல்' குறித்து அதிருப்தியை தெரிவித்தார். அதன்பின் துணைக்கமிஷனர் விசாரித்ததில் அன்று "பார்' வீடியோ நாயகன் நுகர்வோர் அமைப்பு ஒன்றை சேர்ந்தவர் என்பதும், லோகு என்ற பெயரை பார்த்ததும் கோவை டைரில் உளவுத்துறையினர் துப்பறிந்ததும் தெரியவந்தது. "ஒரு ஆள் பாருக்கு செல்வாரா இல்லையா என்பது கூட சரிபார்க்காமல் என்ன ரிப்போர்ட் கொடுக்கிறீர்கள்?' என்று உளவுத்துறை அதிகாரிகளை கடிந்து கொண்டார். தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள கோவை மாநகரில் உளவுத்துறையின் தகுதி இந்த அளவிற்கு தான் உள்ளது... நம்மை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என்று பத்திரிக்கையாளர்கள் மத்தியில் வெளிப்படையான பேச்சு உள்ளது.

March 29, 2010

முடிவெட்ட நிதி உதவி

பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய் "பிரின்ஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் இந்த படத்தை அறிமுகப்படுத்த கோவை ஜிஆர்டி கல்லூரியில் விஷிவல் கம்யூனிகேசன் துறை சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கதாநாயகன் விவேக் ஓபராய், தயாரிப்பாளர் "டிப்ஸ்' நிறுவனத்தின் குமார் தஹ்ரானி, இசையமைப்பாளர் சச்சின்குப்தா ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ் மற்றும் தெலுங்கு மார்க்கெட் மிகப்பெரியது என்பதால் பெரும் எதிர்பார்ப்புடன் இரு மொழிகளிலும் வெளியிடுகிறோம். இது மிகப்பெரிய வெற்றியடையும் என்று தயாரிப்பாளர் குமார் தஹ்ரானி நம்பிக்கை தெரிவிக்க, தமிழில் சில வார்த்தைகள் பேசிவிட்டு(எழுதி வைத்து படிக்காமல் இயற்கையாகவே சிறிது தமிழ் அவருக்கு தெரிகிறது) ஆங்கிலத்தில் பேட்டியளித்தார் விவேக் ஓபராய். இந்திய சினிமா ஸ்டண்ட் காட்சிகளில் ஹாலிவுட், சீனா போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்த படங்களின் காப்பி இருக்கும் என்று ஓப்பனாகவே ஒத்துக் கொண்ட அவர், பிரின்ஸ் படத்தில் முழுக்க முழுக்க இந்திய சிந்தனையுடன் வெளிநாட்டு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். இப்படத்தில் எந்த ஒரு சீனிலும் டூப் எதுவும் போடவில்லை என்பதையும் அதற்காக 5 மாதம் தீவிர பயிற்சி எடுத்ததையும் அவர் கூறினார். பின்னர் அவர் செய்துவரும் சேவைகள் குறித்து அடக்கத்துடன் தெரிவித்த அவர் சேவைகள் குறித்து தனது வெப்சைட்டில் அறிந்து கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டார். ஒரே ஒரு தமிழ் படத்தில் நடித்த ஹீரோக்கள் எல்லாம் பந்தா காட்டும் நிலையில் நிருபர்கள் மட்டுமல்லாமல் சாதாரண மக்களுடனும் விவேக் ஓபராய் எளிமையாக பழகுவது ஆச்சரியத்தை அளித்தது. பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்த சக பத்திரிக்கையாளர் 25 பத்திரிக்கையாளர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பியிருந்தார். ஆனால் வந்து குவிந்ததோ 50 பேர்களுக்கு மேல்... சினிமா பிரஸ் மீட் என்ற "எதிர்பார்ப்புடன்' குவிந்துவிட்டனர் என்று பிரஸ் மீட் ஏற்பாடு பத்திரிக்கையாளர் வருத்தப்பட்டுக் கொண்டார். பிரஸ் மீட் ஆரம்பமாகும் போதே பிரஸ் ரீலீஸ் அடங்கிய பைல் ஒன்று பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதில் வெள்ளை நிற கவர் ஒன்று இருந்தது. அதனுள் 300 ரூபாய்க்கான கிப்ட் வவுச்சர். "அன்பளிப்புகளை' மறுக்கும் நிருபர்கள் மட்டும் அவற்றை திருப்பித் தந்துவிட, எதிர்பார்ப்பு நிருபர்கள் ஆர்வத்துடன் வாங்கி வைத்துக் கொண்டனர். பிரஸ்மீட் முடிந்து விவேக் ஓபராய் உள்ளிட்டவர்கள் அங்கிருந்து சென்றதும் ஆர்வத்துடன் கவரை பிரித்து பார்த்தவர்கள், பிரஸ் மீட் ஏற்பாட்டாளர்களிடம் சண்டைக்கு போய்விட்டனர். இருக்காதா பின்னே...? உள்ளே இருந்த கூப்பனில் 200 ரூபாய்க்கான கூப்பன், கோவையில் உள்ள நவீன சலூன் ஒன்றில் முடிவெட்டிக் கொள்வதற்கான கூப்பன்....! இது எப்படி இருக்கு!

March 6, 2010

எது நிஜம்?

கோவை பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கடந்த பல ஆண்டுகளாகவே ஒரு விஷயத்தில் பலத்த சர்ச்சை இருந்து வருகிறது. பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் பத்திரிக்கைகளிலேயே பணிபுரியாத பலரும் வலம் வருகிறார்கள். அவர்களை களை எடுக்க வேண்டும் என்றும் பல நிருபர்கள் குரல் எழுப்பி வந்தனர்.... தற்போதும் குரல் எழுப்புகின்றனர். ஆனால் "போலி பத்திரிக்கையாளர்' என்பதற்கு இலக்கணம் வகுப்பதில் தான் பலத்த சிக்கல். ஒரு பத்திரிக்கையின் விற்பனை பிரதிகளின் எண்ணிக்கையை வைத்தா, அல்லது "கவர்' மற்றும் அன்பளிப்புகள் வாங்குவதை வைத்து முடிவு செய்வதா என்பதில் தான் குழப்பம். பத்திரிக்கையின் சர்குலேசன் எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம் எப்போது வேண்டுமானாலும் குறையலாம் அதனால் அதை வைத்து முடிவு செய்ய முடியாது. அன்பளிப்புகளை பல ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் சில பத்திரிக்கையாளர்களும் வாங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளதால் அதை வைத்து எப்படி முடிவு செய்வது என்ற திண்டாட்டமும் நிலவுகிறது. பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் வலம் வரும் பலர் அவர்கள் பணிபுரியும் அலுவலகத்திலிருந்து சம்பளமே வாங்குவதில்லை என்றும், பத்திரிக்கையாளர் என்ற பெயரில் அவர்கள் செய்யும் வசூலில் தான் வாழ்க்கை ஓடுகிறது என்றும் கூறுகிறார்கள். பல பத்தாயிரங்கள் சம்பளம் வாங்குபவர்களே வசூலில் ஈடுபடும் போது, சம்பளமே இல்லாதவர்கள் கொஞ்சம் வசூலித்தால் தான் என்ன என்றும் அவர்களுக்கு ஆதரவு குரல் எழாமல் இல்லை. ஆனால் இந்த இரண்டு தரப்பிற்கும் இடையே லஞ்சம் வாங்காத நேர்மையான பத்திரிக்கையாளர்கள் மாட்டிக் கொண்டு திண்டாடுவதும் அவ்வப்போது நடக்கும். எல்லா பத்திரிக்கையாளர்களும் லஞ்சம் வாங்குவார்கள் என்று கருதி லஞ்சம் வாங்காத பத்திரிக்கையாளர்களுக்கு செய்தி வெளியிட லஞ்சம் கொடுக்க சிலர் முயலுவதும், அது சர்ச்சைக்குள்ளாவதும் நடக்கிறது. இது இவ்வாறு இருக்க... சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சியினரால் மக்கள் டிவி அலுவலகம் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கோவை செஞ்சிலுவை சங்க கட்டிடம் முன்பு பத்திரிக்கையாளர்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் ஒரு ஆச்சரியம். யார் யாரையெல்லாம் போலி பத்திரிக்கையாளர்கள் என்று குற்றம்சாட்டி போராட்டம் நடத்தியவர்கள், அந்த பத்திரிக்கையாளர்களுக்கு அங்கீகாரம் அளித்த கதை நடந்தது. இதைப்பார்த்து என்னைப்போன்ற பலருக்கு தலை சுற்றியது.... "அன்று போலிக்கு எதிராக என்று நடத்திய போராட்டம் நிஜமா? அல்லது இன்று அளிக்கும் அங்கீகாரம் நிஜமா?'

February 5, 2010

பத்திரிக்கையாளர் சந்திப்பில் உளவு

05.02.10
கோவையில் நடக்கும் "உலக தமிழர் பாதுகாப்பு மாநாட்டில்' கலந்து கொள்வதற்காக வந்திருந்த பினாங்கு மாநில(மலேசியா) துணை முதல்வர் பி.ராமசாமியின் பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை அவினாசி ரோட்டில் உள்ள சபரிஸ் நெஸ்ட் (நீல்கிரிஸ்) ஓட்டலில் நடந்தது. உலகத்தமிழர் பாதுகாப்பு மாநாடு தமிழக அரசு சார்பில் நடக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு போட்டியாக நடத்தப்படுகிறது என்றே அரசு தரப்பில் கருதப்படுகிறது. அதனால் முதலில் மாநாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டு பின்னர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி ஐகோர்ட் சென்று அனுமதி பெற்றுவந்தார். இதனாலேயோ என்னவோ பிரஸ்மீட் நடந்த ஓட்டலை மத்திய, மாநில உளவுத்துறையினர் குவிந்திருந்தனர். பிரஸ் மீட் ஆரம்பிப்பதற்கு சற்று முன்னர் மத்திய உளவுத்துறையைச் சேர்ந்த ஒருவர் பரபரப்பாக உள்ளே வந்தார். நேராக சேட்லைட் சேனல் நிருபர் ஒருவரைச் சந்தித்து டிஜிட்டல் ரெகார்டர் ஒன்றை கொடுத்து முழு பிரஸ்மீட்டையும் பதிவு செய்து தரும்படி கேட்டுக் கொண்டார். அந்த நிருபரும் ரெகார்டரை வாங்கி வைத்துக் கொண்டார்.(ரெகார்ட் செய்து கொடுத்தாரா இல்லையா என்று தெரியவில்லை) அடுத்து இன்னொரு சேட்லைட் நிருபரிடம் வந்த அந்த "உளவு' டிஜிட்டல் கேமராவை நீட்டி, போட்டோ எடுத்து தரும்படி கேட்டார். ஆனால் அதற்கு அந்த நிருபர், "அது எங்கள் வேலை இல்லை. இது எங்களை நம்பி வந்து செய்தி தருபவர்களுக்கு நாங்கள் துரோகம் செய்வதைப் போல ஆகிவிடும்.' என்று கூறி மறுக்கவே அந்த உளவு வெளியேறினார்.
பத்திரிக்கையாளர்களை போலீஸ் தேடும் குற்றவாளிகள் கூட சந்தித்து தங்கள் தரப்பு நியாயத்தை கூற முடியும் என்ற நிலையில் பத்திரிக்கையாளர்கள் இருப்பது தான் பத்திரிக்கை தர்மம். ஆனால் அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பிற்குள்ளே நடப்பதை பதிவு செய்ய உளவுத்துறை முயற்சிப்பதும், அதற்கு சில பத்திரிக்கையாளர்கள் துணைபோவதும் பத்திரிக்கை தர்மத்தை குழி தோண்டி புதைக்கும் செயல் என்றே தோன்றுகிறது.

January 26, 2010

பிரஸ்காரர்களை பிச்சைக்காரர்களாக்கிய பிஎஸ்என்எல்!

கோவை, நீலகிரி மாவட்டங்களில் பிஎஸ்என்எல்லின் 3 ஜி தொழில்நுட்பம் துவக்கவிழா 23.01.2010 அன்று கோவையில் நடந்தது. மத்திய அமைச்சர் ராசா கலந்து கொண்டு 3 ஜி தொழில்நுட்பத்தை துவக்கி வைத்தார். எப்போதுமே பிஎஸ்என்எல் பிரஸ்மீட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு "அன்பளிப்பு' வழங்குவது வழக்கம் என்பதால், ஐம்பதுக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் குவிந்திருந்தனர். இதனால் பலருக்கு அமரக்கூட இடம் கிடைக்கவில்லை. விழா முடிந்ததும், அன்பளிப்பு வாங்காத நேர்மையான பத்திரிக்கையாளர்கள் ஒதுங்கிக் கொள்ள, பல முன்னணி பத்திரிக்கைகளின் நிருபர்கள் உட்பட பல நிருபர்கள் பிஎஸ்என்எல் பிஆர்ஓவை மொய்த்தனர். சூட்கேஸ் அளவிற்கு பேக் செய்யப்பட்டிருந்த அன்பளிப்பு பெட்டியை சந்தோஷமாக வாங்கி சென்றனர். "மத்திய அமைச்சர் மிகவும் பெருந்தன்மையானவர்...நீலகிரி பத்திரிக்கையாளர்களுக்கு 3 ஜி செல்போன் கொடுத்திருக்கிறாராம். நமக்கும் செல்போன் மட்டுமல்லாது வலுவாக ஏதாவது கவனித்திருப்பார்....' என்று பெட்டிக்குள் என்ன இருக்கும் என்று யூகங்களை அள்ளிவிட்டுக் கொண்டே சில நிருபர்கள் சென்றனர். அப்போது ஒரு மூத்த பத்திரிக்கையாளர் ஆர்வமிகுதியால் நிகழ்ச்சி நடந்த அரங்கைவிட்டு வெளியேறியதும் பார்சலை பிரித்து பார்க்க... அன்பளிப்பு வாங்கிய அத்தனை பத்திரிக்கையாளர்களின் முகவும் "பொசுக்' என்று வாடிப்போனது. பார்சலை பிரித்த மூத்த பத்திரிக்கையாளரின் வாயிலிருந்தே சொற்கள் வந்து விழுந்தன..."பிரஸ்காரங்களையே பிஎஸ்என்எல்காரங்க பிச்சைக்காரங்களாக்கீட்டாங்கப்பா.... ஒரு தட்டு...4 டம்ளர்கள கொடுத்து ஏமாத்திட்டாங்களே.....!'