பத்திரிக்கைத்துறை அரசின் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு ஊடகத்துறையால் ஏற்படுகிறது. இதன்காரணமாக அரசு பல்வேறு நலத்திட்டங்களை பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. தமிழகத்தில் பல நகரங்களில் பத்திரிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனைகளும் வழங்கப்பட்டுள்ளது. கோவையில் இந்த வீட்டுமனை சலுகையை பெற கடந்த பல ஆண்டுகளாக பத்திரிக்கையாளர்கள் போராடிவருகின்றனர். சாதாரண பத்திரிக்கையாளரால் கோவை போன்ற நகரங்களில்

மார்க்கெட் விலையில் வீட்டுமனை வாங்குவது என்பது குதிரை கொம்பு என்பதோடு, பத்திரிக்கையாளர் நகரில் வசிப்பது அவசியத் தேவை என்பதால் இந்த கோரிக்கை நியாயமானது என்றே நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்.
கோவை பத்திரிக்கையாளரின் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டு கடந்த பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியானது. கோவை பத்திரிக்கையாளர்கள் மத்தியிலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. எங்கு நிலம் அமையும், யார் யாருக்கெல்லாம் நிலம் கிடைக்கும் என்று ஒருவருக்கொருவர் பரபரப்பாக பேசும் டாபிக் ஆனது. குறைந்தது 5 ஆண்டு அனுபவம் உள்ள பத்திரிக்கையாளர்கள் தாங்கள் பணிபுரியும் பத்திரிக்கை அலுவலகத்திலிருந்து கடிதம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று மக்கள் தொடர்பு அலுவலர் அலுவலகத்தில் கேட்டு பெற்றனர்.
முதற்கட்டமாக 130 பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் பேச்சு இருந்தது.( எந்த விபரமும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.) முதல்வர் கருணாநிதி 12.12.2010 அன்று கோவை வருவதாக அறிவிக்கப்பட்டவுடன் 10.12.2010 அன்று அவசர அவசரமாக குறிப்பிட்ட சில பத்திரிக்கையாளர்களுக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் பட்டியலை மக்கள் தொடர்பு அதி காரி காண்பித்தார். அதில் மிகப்பெரிய ஆச்சரியம் தகுதியற்ற பலரும் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். பத்திரிக்கை ஆசிரியர்கள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர், வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று 161 பேர் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இவர்களிலிருந்து 130 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதற்காக 11.12.2010 அன்று குலுக்கல்(!) நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. பயனாளிகளை தேர்வு செய்ய தகுதியின் அடிப்படையில் பல வாய்ப்புகள் இருக்க, குலுக்கல் முறையில் தேர்வு செய்வது எப்படி சரியாக இருக்கும், அனுபவத்தை அடிப்படையாக கொண்டு தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
திட்டமிட்டப்படி குலுக்கல் நடந்து 130 ÷ பர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் தகுதியான பலருக்கு அதிர்ஷ்டமில்லை. குலுக்கல் முறையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், "20 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு இடம் கிடைக்கும் நிலை வந்துள்ளது. எதிர்ப்பு தெரிவித்தால் இடம் கொடுப்பதையே நிறுத்திவிடுவார்கள்' என்று சிலர் கருத்து தெரிவித்ததால் தீவிரம் காட்ட முடியவில்லை.
ஆனாலும் தவறு செய்பவர்களையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய பத்திரிக்கையாளர்கள் சம்மந்தப்பட்ட விவகாரத்தில் விதிமுறை மீறல்களை அனுமதிக்கலாமா என்ற மனஉளைச்சலும் ஏற்படாமல் இல்லை. கோவை பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கும் விவகாரத்தில் பின்வரும் கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை....
* பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை அளிக்கும் அரசு திட்டத்தில் பயனாளிகள் தேர்வுக்கு என விதிமுறைகள் ஏதும் இல்லையா?
* பயனாளிகள் தேர்வுக்கென அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் அடங்கிய குழுவை அமைக்காதது ஏன்?
*20 ஆண்டுகளாக கோவையில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்கள் குலுக்கல் என்ற முறையால் வெளியில் நிற்க, நேற்று வந்த பத்திரிக்கையாளர்களுக்கு மனை ஒதுக்கீடு செய்வது நியாயமா?
*வீட்டுமனை என்பது பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்தவா அல்லது சொத்து சேர்க்கவா?
*கோவையில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு முன்னுரிமை, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு கிடைக்காதவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படை தகுதியை புறந்தள்ளியது ஏன்?
*ஒரே குடும்பத்தில் பலருக்கு மனை ஒதுக்கீடு நியாயமா? அவர்கள் தனித்தனி வீடுகளில் வசிக்கப்போகிறார்களா?
*உண்மையாகவே மக்களிடம் செல்லும் பத்திரிக்கைகள், பெயரளவிற்கு நடக்கும் பத்திரிக்கைகள் என்ற வித்யாசம் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியாதா?
* பத்திரிக்கை என்று பதிவு செய்திருந்தாலே அவர்களுக்கு வீட்டுமனை என்றால், நூற்றுக்கணக்கான பதிவு பெற்ற பத்திரிக்கைகள் உள்ளனவே... அவற்றிற்கெல்லாம் வீட்டுமனை வழங்க கோவையில் இடம் உள்ளதா?
*அனுபவம் அடிப்படையில் 130 பேரை தேர்வு செய்துவிட்டு அனுபவம் குறைந்தவர்களுக்கு அடுத்த கட்டத்தில் கொடுப்பது தானே நியாயம்?
* உழைக்கும் பத்திரிக்கையாளர் சட்டத்தின் கீழ் பணிபுரிபவர்கள் தானே பத்திரிக்கையாளர்கள்?
*கோவை செய்தியை கவனிக்கிறார்கள் என்பதற்காக பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு நிலம் ஒதுக்க முன்வரும் மாவட்ட நிர்வாகம், சென்னையில் செயல்படும் பல நிறுவனங்களுக்கு கோவையில் நிருபர்கள் இல்லாமல் போன் மூலம் தகவல் பெற்று வெளியிடுகிறார்களே அவர்களுக்கெல்லாம் மனை ஒதுக்க மாவட்ட நிர்வாகம் முன்வருமா?
இன்னும் ஏராளமான கேள்விகள் பலரது மனதில் எழுந்துள்ளது. வருத்தங்களும் தான்....சிலர் நீதிமன்ற படியேறவும் தயாராகிவிட்டனர். பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை என்பது விதிமுறைப்படி ஒதுக்க வேண்டுமே தவிர, தலை"விதி'ப்படி ஒதுக்க கூடாது என்பதே என் நிலை.
கார்ப்பரேட் நிறுவனங்கள் எல்லாமே அரசு மற்றும் அதிகார வர்க்கத்திற்குள் ஊடுருவி காரியம் சாதிப்பதற்காக சம்பளம் கொடுத்து ராடியா போன்ற ஆட்களை வேலைக்கு வைத்துக் கொள்வதுண்டு. தாங்கள் விரும்பியதை செய்து முடிக்க எந்த வழிகளையும் மேற்கொள்ளத் தயங்காத தைரியசாலிகள் இவர்கள். அரசியல்வாதிகள், அதிகாரிகள் என அதிகார வட்டாரங்களில் இவர்களுக்கு இருக்கும் சகட்டுமேனி தொடர்புகளை வைத்து, அரசின் கொள்கைகள், விதிமுறைகளையே கூட மாற்றி காரியம் சாதிப்பார்கள்.
அரசியல், அரசாங்கம் ஆகியவற்றோடு எப்போதும் ஒட்டிக்கொண்டே நிற்பவர்கள் பத்திரிகையாளர்கள். அதிகார மையங்களுக்குள் எளிதில் நுழைந்து திரும்பும் ஆற்றல் மீடியாக்காரர்களுக்கு உண்டு. எனவே, மீடியாக்காரர்களையும் தங்களது காரியங்களுக்கு இதுபோன்று தரகர்களாக பயன்படுத்திக் கொள்வதுண்டு. இதனாலேயே, டெல்லி பத்திரிகையாளர்களில் பலரும் புரோக்கர் தொழிலையும் சீக்ரெட்டாக செய்து வருகின்றனர் என்பதும் பலரும் அறியாத செய்தி. இதுகூட, காலம் காலமாக நடைமுறையில் இருந்து வரும் ஒன்றுதான். இத்தனை நாட்கள் இருட்டுக்குள் இருந்தது. இப்போது ராடியா மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
2009&ம் ஆண்டு மே, ஜூலை மாதங்களில் மட்டும் 104 முறை வருமானவரி இலாகாவால் ராடியாவின் போன் டேப் செய்யப்பட்டுள்ளது. அதில், யார் யாருடன் பேசினார் என்னென்ன பேசினார் என்ற விவரங்களை, ‘ஓப்பன் மேகசின்’ என்ற இணையதள பத்திரிகையும் ‘அவுட்லுக்’ இதழும் வெளியிட்டுள்ளன. ஒரு சிலரைத் தவிர வெகுஜன பத்திரிகைகள் எதுவுமே இதை செய்தியாக்கவில்லை. ராடியாவின் புரோக்கர் வேலைக்கு ஒத்து ஊதியதும் உதவி செய்ததும் முக்கிய பத்திரிகையாளர்கள் என்பதால், தனது சாதியைக் காட்டிக் கொடுக்க விரும்பாததே இதற்கு காரணம். ஆனாலும், இந்த டேப்பை ஸ்பெக்ட்ரம் வழக்கிற்காக வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். ஆங்கில ஏட்டிலேயே இந்த தகவல் வந்துள்ளது என்று சில அரசியல்வாதிகள் மேற்கோள் காட்டுவதுண்டு. ‘ஆங்கில மீடியா என்றாலே அறிவாளிகளும் உண்மை விளம்பிகளும் மட்டுமே ஜீவிக்கக் கூடிய இடம்’ என்ற குருட்டு நம்பிக்கைகாரர்கள் இந்நாட்டில் நிறைய உண்டு. ஆனால், சரளமான ஆங்கிலத்தில் நாட்டு நடப்புகளை எல்லாம் தொண்டை வலிக்க தினமும் பேசும் பர்கா தத்தும், காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக மட்டுமே பேனாவை வளைத்து வளைத்து எழுதும் கட்டுரையாளர் வீர் சங்வியும் இந்த புரோக்கர் நீரா ராடியாவிடம் பேசும் பேச்சுக்களை வைத்துப் பார்த்தால் இவர்கள் பத்திரிகையாளர்களா இல்லை பவர் புரோக்கர்களா என்ற கேள்வியே எழுகிறது.
உரையாடலை வைத்து பார்க்கையில், சர்வ சாதாரணமாக அதிகார வளையத்திற்குள் ஊடுருவும் வல்லமையைப் பெற்றுள்ளார் இந்த ராடியா. தான் விரும்பும் தகவலை உரிய நபருக்குக் கொண்டுபோய் சேர்க்கும் வேலையை பர்கா தத் மூலம் செய்கிறார். அதைவிட மிகப்பெரிய கட்டுரையாளராக கருதப்படும் வீர் சங்விக்கு, அவர் எழுதப்போகும் கட்டுரையில் என்னென்ன பாயின்ட்ஸ் வர வேண்டுமென்று டிக்டேட் செய்கிறார் ராடியா. இன்னும் பல முக்கிய மீடியா உலக ஜாம்பவான்கள் ராடியாவுடன் தொடர்பில் இருந்துள்ளது உரையாடலில் தெரிகிறது. ஏராளமானோர் ராடியாவின் ‘பே ரோலில்’ இருப்பதாகக்கூட ஒரு தகவல் உண்டு. ராடியாவும் பல முக்கிய பத்திரிகையாளர்களும் பேசும் அந்த உரையாடல், யூ டியூப்பில் வெளியான சில தினங்களில் மாயமாய் மறைந்துவிட்டது. அந்தளவுக்கு இந்த கும்பலுக்கு செல்வாக்கு.
டெலிகாம் இலாகா-விற்கு யார் வரவேண்டும் யார் வரக்கூடாது என்பதை, இந்த கார்ப்பரேட் மீடியா கூட்டணி முடிவு செய்கிறது அந்த டெலிபோன் உரை-யாடலில். ராடியாவுக்கு பக்கபலமாக இந்த பத்திரிகையாளர் செய்யும் ‘பவர்’ புரோக்கிங் நிச்சயமாக முகம் சுளிக்க வைக்கும் ரகமே. அரசாங்கத்தில் யார் யார் அமைச்சர்களாக வர வேண்டுமென்பதை பிரதமர்தான் முடிவு செய்வார் என்று அரசியல் சட்ட தார்மீக நெறி கூறுகிறது. ஆனால், அரசாங்கத்தில் யார் யார் அமைச்சர்களாக ஆக வேண்டுமென்பது குறித்தும் அவர்களுக்கு என்னென்ன இலாகாக்கள் தரப்பட வேண்டுமென்றும் இந்நாட்டின் மிகப்பெரும் கார்ப்பரேட் கம்பெனி தரகர்களும், மீடியா உலகத்தின் முக்கிய பத்திரிகையாளர்களும் சேர்ந்து முடிவு செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது என்பதே ‘நீரா ராடியா எபிஸோட்’ உணர்த்தும் பாடம்.
‘கழகத்தின் சார்பில் யார் யார் அமைச்சரா-வார்கள் என்பதை கட்சியின் உயர்மட்டக்குழு கூடி முடிவெடுக்கும்...’ என்றெல்லாம் இனி வார்த்தைகளைக் கேட்கும் போது ஈயத்தைக் காய்ச்சி காதில் ஊற்றியது போலத்தான் இருக்கும் நமக்கு. வழக்கம் போல அதையும் தாங்கிக் கொள்ளவேண்டியதுதான்!




