February 5, 2010

பத்திரிக்கையாளர் சந்திப்பில் உளவு

05.02.10
கோவையில் நடக்கும் "உலக தமிழர் பாதுகாப்பு மாநாட்டில்' கலந்து கொள்வதற்காக வந்திருந்த பினாங்கு மாநில(மலேசியா) துணை முதல்வர் பி.ராமசாமியின் பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை அவினாசி ரோட்டில் உள்ள சபரிஸ் நெஸ்ட் (நீல்கிரிஸ்) ஓட்டலில் நடந்தது. உலகத்தமிழர் பாதுகாப்பு மாநாடு தமிழக அரசு சார்பில் நடக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு போட்டியாக நடத்தப்படுகிறது என்றே அரசு தரப்பில் கருதப்படுகிறது. அதனால் முதலில் மாநாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டு பின்னர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி ஐகோர்ட் சென்று அனுமதி பெற்றுவந்தார். இதனாலேயோ என்னவோ பிரஸ்மீட் நடந்த ஓட்டலை மத்திய, மாநில உளவுத்துறையினர் குவிந்திருந்தனர். பிரஸ் மீட் ஆரம்பிப்பதற்கு சற்று முன்னர் மத்திய உளவுத்துறையைச் சேர்ந்த ஒருவர் பரபரப்பாக உள்ளே வந்தார். நேராக சேட்லைட் சேனல் நிருபர் ஒருவரைச் சந்தித்து டிஜிட்டல் ரெகார்டர் ஒன்றை கொடுத்து முழு பிரஸ்மீட்டையும் பதிவு செய்து தரும்படி கேட்டுக் கொண்டார். அந்த நிருபரும் ரெகார்டரை வாங்கி வைத்துக் கொண்டார்.(ரெகார்ட் செய்து கொடுத்தாரா இல்லையா என்று தெரியவில்லை) அடுத்து இன்னொரு சேட்லைட் நிருபரிடம் வந்த அந்த "உளவு' டிஜிட்டல் கேமராவை நீட்டி, போட்டோ எடுத்து தரும்படி கேட்டார். ஆனால் அதற்கு அந்த நிருபர், "அது எங்கள் வேலை இல்லை. இது எங்களை நம்பி வந்து செய்தி தருபவர்களுக்கு நாங்கள் துரோகம் செய்வதைப் போல ஆகிவிடும்.' என்று கூறி மறுக்கவே அந்த உளவு வெளியேறினார்.
பத்திரிக்கையாளர்களை போலீஸ் தேடும் குற்றவாளிகள் கூட சந்தித்து தங்கள் தரப்பு நியாயத்தை கூற முடியும் என்ற நிலையில் பத்திரிக்கையாளர்கள் இருப்பது தான் பத்திரிக்கை தர்மம். ஆனால் அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பிற்குள்ளே நடப்பதை பதிவு செய்ய உளவுத்துறை முயற்சிப்பதும், அதற்கு சில பத்திரிக்கையாளர்கள் துணைபோவதும் பத்திரிக்கை தர்மத்தை குழி தோண்டி புதைக்கும் செயல் என்றே தோன்றுகிறது.

No comments: