Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

August 18, 2010

காங்கிரஸ்... நல்ல காங்கிரஸ்...!

மிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சற்று வித்யாசமான அனுபவம் தான். 16.8.10 அன்று கோவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சி.சுப்பிரமணியத்தின் நூற்றாண்டுவிழா பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய அவர் நிருபர்களைச் சந்தித்தார்.
ராகுல்காந்தி நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் செய்ததற்காக கோவை ஜெயில் மைதானத்திற்கு வாடகையை இதுவரை செலுத்தாமல் இருப்பது
, அடுத்த தேர்தல் கூட்டணியிலாவது அமைச்சரவையில் பங்கு குறித்து தேர்தலுக்கு முன்பே ஒப்பந்தம் போடுவது, கோஷ்டி பிரச்சனை என்று காட்டமான கேள்விகள் கையில் இருந்தாலும் சில கேள்விகளுக்கு பின்னர் கேட்கலாம் என்றிருந்தோம்.
ஆனால் துவக்கத்திலேயே நூற்றாண்டுவிழா கூட்டம் ஜெயில் மைதானத்தில் நடக்கும் என்று அவர் அறிவிக்க வேறு வழியில்லாமல் முதல்கேள்வியாக, "ஜெயில் நிர்வாகத்திற்கு பழைய பாக்கியை செட்டில் செய்யாமல் இருப்பது ஏன்?' என்று கேட்கவேண்டியதாயிற்று.... ஆனால் அவர் அளித்த பதிலைத்தான் என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
"அரசு விழா நடத்தினால் அரசு வாடகை செலுத்தும், அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்தினால் அரசியல் கட்சிகள் தான் வாடகை செலுத்த வேண்டும்.... இது எங்களுக்கு தெரியும். இதில் தவறு நேர்ந்திருந்தால் சரி செய்யப்படும். முதலில் அவர்கள்(ஜெயில் நிர்வாகம்) தாக்கீது அனுப்புவார்கள்... அது கிடைத்தவுடன் நாங்கள் கட்டணத்தை செலுத்தவிடுவோம். எங்கள் கட்சி பாரம்பரியம் மிக்கது. இதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. அவர்கள் தாக்கீது அனுப்பியுள்ளார்களா என்பது குறித்து கூற முடியாது...' எவ்வளவு தெளிவான பதில். அமைச்சரவை இடம் குறித்து அடுத்த கேள்வியை கேட்டதற்கு பக்கத்தில் இருந்த எம்.எல்.ஏ. கந்தசாமி உட்பட பலர் சிரித்தாலும், "தேர்தல் கூட்டணி குறித்து இப்போது பேச முடியாது. இன்னும் ஒரு ஆண்டு உள்ளது. இது குறித்து சோனியாகாந்தி முடிவு செய்வார்...' என்றே பதில் அளித்தார் தங்கபாலு. இது போன்ற எத்தனை கேள்விகளை வீசினாலும் சிரித்தபடியே பதில் அளித்து சமாளித்தார் அவர். ஆனால் என்ன, நியூர் ஒன்னும் தேரலை என்று பல நிருபர்கள் புலம்பியபடி சென்றனர்.
கொசுறு: அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் தங்கள் பலத்தை கோவையில் காட்டிவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியும் களத்தில் இறங்கியிருப்பதால் பெருங்கூட்டத்தை கூட்டிவிடுவார்கள் என்று எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் அந்த நம்பிக்கை தங்கபாலுவுக்கே இல்லை போலும்.... எத்தனை பேர் கூட்டத்திற்கு வருவார்கள் என்று கேட்டதற்கு, மற்ற கட்சிகளைப் போல மாநில அளவில் ஆட்களை அழைத்து வந்து கூட்டம் நடத்தமாட்டோம். கோவை மாநகர காங்கிரஸ் சார்பில் உண்மையான காங்கிரஸ் கட்சியினர் மட்டும் கலந்து கொள்வார்கள் என்று சற்று பாதுகாப்பாக பதில் அளித்தார். பின்னர் வாசன் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது உண்மை நிலை வெளிபட்டது....
"சி.எஸ். நூற்றாண்டுவிழா என்று கூறி அனைத்து தரப்பினரையும் சேர்த்து கூட்டம் நடத்த தங்கபாலுவும், ப.சிதம்பரமும் திட்டமிட்டுள்ளனர். பிரணாப் முகர்ஜி வருவதால் அவருக்கு நெருக்கமான வாசனும் வந்துவிடுவார். அதனால் எங்கள் ஆதரவில் கூட்டத்தை திரட்டி தங்களுக்கு செல்வாக்கு உள்ளது போல மேலிடத்தில் காண்பிக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள். நாங்கள் ஏமாறமாட்டோம். வாசன் வந்தால், நிர்வாகிகள் மட்டும் கூட்டத்தில் கலந்துகொள்வோம்...' என்றார் அவர். தலை சுற்றியது எனக்கு!

August 3, 2010

அதிமுகவா, திமுகாவா?

செம்மொழி மாநாடும் அதைத்தொடர்ந்து அதிமுக நடத்திய கண்டன பொதுக்கூட்டம், அதில் கூடிய கூட்டம், அதற்கு போட்டியாக திமுக நடத்திய பொதுக்கூட்டம், அதன் எதிரொலிகள் போன்றவை சமீபகால கோவை பத்திரிக்கை உலகின் ஹாட் டாபிக்குகளாக இருந்தது. செம்மொழி மாநாட்டிற்கு கூடிய கூட்டம் தங்களுக்கு ஓட்டாக குவியும் என்று திமுக எதிர்பார்த்ததோ இல்லையோ அதிமுக வட்டாரத்தில் பயத்தை ஏற்படுத்தியது உண்மை. அதனால் தான் அவசர அவசரமாக திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் ஜூலை 13 ம் தேதி கண்டன கூட்டம் நடந்தது. இதில் ஜெயலலிதாவே எதிர்பார்க்காத அளவிற்கு 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டு வந்தனர். இது கோவை மட்டுமல்லாமல் தமிழகம் முழவதும் அதிமுகவிற்கு எழுச்சியை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து கண்டன ஆர்ப்பாட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்த ஜெயலலிதா களம் இறங்கிவிட்டார். கோவையில் கூடிய கூட்டத்தை அறிந்த ராகுல்காந்தி, அடுத்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும் எண்ணத்திற்கு வந்துவிட்டதாக த
கவல்கள் பரவின. இதனால் அவசர அவசரமாக அதிமுகவிற்கு போட்டியாக திமுகவும் பொதுக்கூட்டம் ஒன்றை (நேற்று 2.8.2010 அன்று) அதே வ.உ.சி. பூங்காவில் நடத்தியது. ஆனால் பலன்தான் எதிர்மறையாக போய்விட்டது. அதிமுக கூட்டத்திற்கு குறைந்தது 2 லட்சம் பேர் வந்திருப்பார்கள். ஆனால் திமுக கூட்டத்திற்கோ 60 ஆயிரத்திற்கு மேல் இல்லை. ஜெயலலிதா பேசும் போது ஒட்டுமொத்த கூட்டமும் மைதானத்திற்குள் வர முண்டியடித்தால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. கருணாநிதி பேசும் போது பாதி மைதானம் காலியாகிவிட்டிருந்தது. ஜெயலலி
தா கண்டன கூட்டத்தில் மைதானம் முழுவதும் மக்கள் நெருக்கியடித்து நின்றிருந்ததோடு, அவினாசிரோடு, ஸ்டேடியம் ரோடு என்று மைதானத்தை சுற்றி அனைத்து பகுதிகளிலும் மக்கள் வெள்ளம் நிறைந்திருந்தது. திமுக கூட்டத்தில் நடுரோட்டில் டிஜிட்டல் போர்டு வைத்து பொதுக்கூட்டத்தை ஒளிப்பரப்பி ரோடு எங்கும் மக்கள் வெள்ளம் இருப்பது போல காட்ட முயன்று தோற்றார்கள். திமுக கூட்டத்திற்கு கூட்டம் வராததற்கு திமுகவில் நடக்கும் உட்கட்சிபூசல், விலைவாசி உயர்வால் ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்புபோன்ற பல காரணங்கள் உள்ளன. ஆனால்
முதல்வர் கருணாநிதியோ பத்திரிக்கைகள் மீது வெறுப்பை உமிழ்ந்து பேசுகிறார்.

June 29, 2010

செம்மொழி மாநாடு: ஒரு பத்திரிக்கையாளன் பார்வையில்!

முதல்வர் கருணாநிதியின் கனவு அவர் எதிர்பார்த்ததைவிட வெற்றிகரமாக நிறைவேறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இந்த அளவிற்கு மக்கள் வெள்ளம் மாநாட்டிற்கு வரும் என்று அவர் எதிர்பார்த்திருக்கமாட்டார். அதனால் தான் தமிழகம் முழுவதலிருந்தும் அரசியல் கூட்டங்களுக்கு ஆள் சேர்க்கும் அதே "பார்முலாவை' பயன்படுத்தி முதல் நாளில் ஆட்களை வரவழைத்தனர். ஆனால் தி.மு.. கட்சிக்கொடிகள் கண்ணில் தென்படாமல், ஊடகங்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் மாநாட்டை பற்றி மக்களிடம் கொண்டு சென்ற விழிப்புணர்வு மக்கள் கூட்டத்தை வரவழைத்துவிட்டது. கோவையில் யார் கண்காட்சி நடத்தினாலும் மக்கள் கூட்டம் குவிந்து வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து பார்ப்பது வழக்கம். அதிலும் ஊடகங்களில் தொடர்ந்து ஆறு மாதங்களாக வெளிவந்த செய்திகள், அலங்கார ஊர்திகள் குறித்து தினந்தோறும் வெளியிடப்பட்ட எதிர்பார்ப்புகள் மக்களை அலை அலையாக வரச்செய்தன. ஆனால் இவர்களது கவனம் முழுவதும் கண்காட்சி, உணவு அரங்கு, அலங்கார ஊர்தி ஆகியவற்றை சுற்றியே இருந்தது. மாநாட்டு பந்தலுக்குள் பெரும்பாலும் கட்சிக்காரர்கள் மட்டுமே தென்பட்டனர். 5 நாட்களில் குறைந்தது 10 லட்சம் பேர் கண்டு களித்திருப்பார்கள். மாநாட்டு நிகழ்ச்சிகளில் அனைவரும் எதிர்பார்த்ததைப் போலவே முதல்வர் கருணாநிதியின் புகழ் பாடிய நிகழ்ச்சிகள் தான் ஏராளம். பேரூர் ஆதீனம் ராமசாமி அடிகளார் முதல் திரைப்பட கவிஞர்கள் வரை அனைவருமே கருணாநிதியின் புகழ் பாடினார்கள். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் சிறப்பு கருத்தரங்கில் குட்டி குட்டி கட்சித் தலைவர்களையும் அழைத்திருந்ததால் அவர்கள் அடித்த ஜால்ரா சத்தத்தை முதல்வராலேயே தாங்க முடியாத அளவிற்கு போனது. ஆனாலும் சத்தம் குறையவில்லை. மாநாடு முழுவதுமே இதை காணமுடிந்ததால் கவியரங்கம், பட்டிமன்றம் போன்றவற்றை காது கொடுத்து கேட்க முடியவில்லை. ஆய்வரங்கம் நிகழ்ச்சிகளில் எதிர்பார்த்த அளவிற்கு பங்கேற்பாளர்கள் வரவில்லை என்பது உண்மை. தமிழ் தெரியாத பலரையும் தமிழறிஞர்களாக புகழப்பட்டதும் நடந்தது. இணைய கருத்தரங்கில் பெரும்பாலும் இருக்கைகள் காலியாகவே இருந்தன. ஒன்றிரண்டு கருத்தரங்குகள் நல்ல கருத்துக்களை கொண்டிருந்தாலும் கேட்கத் தான் ஆளில்லை. போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டது நல்ல பலனை தந்தது. ஆனாலும் சில அதிகாரிகள் டுபாக்கூர் பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள் என்று தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கியிருந்தது பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியது. தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. 20 ரூபாய் பெருமானமுள்ள உணவை 60 ரூபாய்க்குவாங்கி அதை 30 ரூபாய்க்கு விற்பனை செய்தது, வளர்ச்சிப்பணிகள் தரமில்லாமல் அவசர கதியில் முடிக்கப்பட்டது, மாநாட்டு அரங்கங்களில் டன் கணக்கில் பிளாஸ்டர் ஆப் பாரீஸ் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தியது, அலங்கார ஊர்திகள் முதல் அனைத்து ஏற்பாட்டிலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் "அள்ளியது'... என்ற குறைகளையெல்லாம் விட்டுவிட்டு பார்த்தால் மாநாடு வெற்றி தான். உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாடு அரசியல் நோக்கோடு நடத்தப்பட்டதல்லை, அது தமிழ் மொழிக்கான அரசியல் சார்பற்ற மாநாடு என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்ததை மக்கள் அப்படியே தான் ஏற்றுக் கொண்டு மாநாட்டிற்கு வந்தனர். அதை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் புத்திசாலித்தனம். ஆனால் இது தங்கள் கட்சிக்காக, ஆட்சிக்காக கூடிய கூட்டம் என்று கருதப்படுமானால் அது ஏமாற்றத்தையே அளிக்கும் என்பதே உண்மை. சூட்கேஸ்க்குள் என்ன இருக்கு? மாநாட்டின் மிகப்பெரிய வெற்றிக்கு பத்திரிக்கையாளர்களும் ஒரு காரணம். அதனால் பத்திரிக்கையாளர்களை கவனிக்காமல் இருப்பார்களா? சென்னையிலிருந்து வந்த பத்திரிக்கையாளர்களுக்கு ( அன்பளிப்புகளை ஏற்றுக் கொள்ளாதவர்களைத் தவிர) ஒரு சூட்கேஸ், துண்டு, 2 ஜிபி மெமரி கார்டு ஆகியவற்றை அன்பளிப்பாக இறுதிநாளன்றே செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரிகள் விநியோகித்தனர். சூட்கேஸ்க்குள் "கனமாக' இருக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு "காற்று' தான் காத்திருந்ததாக கேள்வி. கோவை பத்திரிக்கையாளர்களுக்கு நேற்று இரவு முதல் விநியோகம் நடக்கிறது. சூட்கேஸ், துண்டு ஒன்று செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலகத்திலிருந்து பகிரங்கமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதை வாங்கிக் கொள்ளாத நிருபர்களின் பங்கை என்ன செய்வது என்ற குழப்பமும் செய்தி மக்கள் தொடர்புத்துறைக்கு உள்ளது. இதற்கிடையே சென்னையிலிருந்து கோவை பத்திரிக்கையாளர்களுக்கு போன் வந்தவண்ணம் உள்ளது. அதில் பல குரல்களும் கேட்கும் ஒரே கேள்வி, "உங்களுக்கு சூட்கேஸ்க்குள் லேப்டாப் வைத்து கொடுத்தார்களாமே உண்மையா?' என்பது தான் அது. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதை சொல்லக்கூட எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம் வேண்டும் போல இருக்கிறது.

June 23, 2010

இன்று துவங்குகிறது... என்று தீரும்?

அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல தானும் உலகத் தமிழ் மாநாட்டை நடத்திவிட வேண்டும் என்று முயற்சித்து, அறிவித்து....ஈழத்தில் லட்சக்கணக்கானோர் பலியாகி, பலர் முள்வேலி முகாம்களில் அடைப்பட்டுக் கிடக்கும் போது தமிழ் மாநாடா என்று எதிர்ப்புகள் கிளம்பியதால் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடத்துகிறார் கருணாநிதி.இந்த மாநாட்டில் தமிழுக்கு பலன் இருக்காது, கருணாநிதியின் புகழ்பாடுதல் தான் நடக்கும் என்று மாநாட்டு எதிர்ப்பாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனாலும் அவசர கதியில் கோவை கொஞ்சம் அழகூட்டப்பட்டிருக்கிறது என்பது உண்மை. தரத்தைப் பற்றி சிந்திக்காவிட்டால் அடுத்த மழை வரும் வரை கோவையின் முக்கிய சாலைகள் பளபளக்கும்.... "பிளாட்பாரங்களில் டைல்ஸ்' ஒட்டிக்கொண்டிருக்கும். மாநாடு முடியும் வரை வர்த்தக நிறுவனங்களின் ஆங்கில பெயர் பலகைகளின் மீது தற்காலிகமாக ஒட்டப்பட்டுள்ள தமிழ் நிற்கும்.ஆனால்....* தமிழில் படித்தவர்களுக்கு வேலை கிடைக்காது என்ற நிலை மாறும் நாள் எந்நாள்?* பனிரெண்டாவது படித்த மாணவனுக்கு தவறில்லாமல் தமிழ் எழுதப்படிக்கத் தெரியவில்லையே... இந்த இழிநிலை மாறும் நாள் எந்நாள்?*தமிழ் வாழ்க என்று கோஷம் போடும் தலைவர்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தமிழ் கொலைக்கு எப்போது தடை வரும்?* தலைவர்களின் வாரிசுகள் எப்போது தமிழ் வழிக்கல்வி பயிலுவார்கள்?* தமிழர்களின் வரிப்பணத்தை விரயமாக்கி, தமிழ் மாநாட்டு பணிகளில் கூட ஊழல் புரியும் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் இன்னொரு முகத்தினை அப்பாவி தமிழன் என்றுணர்வான்?இன்னும் எத்தனையோ கேள்விகள் என் மனதில் எழுந்தவண்ணம் உள்ளது. இதற்கு யார் பதில் உரைப்பார்!

May 31, 2010

சுட்டெரிக்கும் வெய்யிலில் 3 மணிநேரம்!

நீ.....ண்ட நாட்களுக்கு பிறகு மக்கள் பிரச்சனைக்காக மக்கள் பிரதிநிதி ஒருவர் சுட்டெரிக்கும் வெய்யிலில் 3 மணிநேரம் அமர்ந்து போராடிய காட்சியை காணமுடிந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் சேவைக்காக வந்துள்ள அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஏ.சி. அறைகளுக்குள்ளும், கார்களுக்குள்ளும் நுழைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. பசிக் கொடுமையிலும், வியர்வை நாற்றமிகுந்த பஸ் நெரிசல்களிலும், வெய்யில், மழைகளிலும் அவதிப்படும் மக்களின் துயரங்கள் இவர்களை நெருங்குவதில்லை. அதனால் தானோ என்னவோ மக்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வைத் தர எண்ணாமல் இலவசங்களை அரசியல்வாதிகள் அள்ளி எறிகிறார்கள். இவர்கள் நடத்தும் போராட்டங்களும் உடலை வறுத்தும் அளவிற்கு இல்லாமல், மீடியாக்களுக்கு போஸ் கொடுக்கும் வகையில் மட்டும் இருக்கும். சற்று வித்யாசமாக கோவை பேரூர் சட்டசபைத் தொகுதி உறுப்பினர் வேலுமணி, தனது தொகுதி குடிநீர் பிரச்சனைக்காக மக்கள் குறைதீர்க்கும் நாளான இன்று மாவட்ட ஆட்சியர் உமாநாத்திடம் மனு கொடுக்க வந்தார். வாரத்தில் முதல் வேலை நாளில் மக்களிடம் மனு பெற வேண்டும் என்பது விதிமுறை என்றாலும் செம்மொழி மாநாட்டின் வேலைப்பளுவில் மக்கள் குறை கேட்க மாவட்ட ஆட்சியருக்கு நேரமில்லை. மாவட்ட வருவாய் அலுவலர் தான் மனுக்களை பெறுகிறார். மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தாலே வேலை நடப்பது சிரமமான காலத்தில் டி.ஆர்.ஓவிடம் மனு அளிக்க எம்.எல்.ஏ.வேலுமணி விரும்பவில்லை. செம்மொழி மாநாட்டை காரணம் காட்டி மக்களின் அத்தியாவசியப் பிரச்சனைகளைக் கூட அதிகாரிகள் கண்டு கொள்ளாதது நியாயமில்லை. கலெக்டர் வந்து மனுவை பெற்று தீர்வு காணும்வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என்று கலெக்டர் அலுவலக வளாக தார்ரோட்டில் காலை 11.30 மணியிலிருந்து சுட்டெரிக்கும் வெய்யில் அமர்ந்து விட்டார். அடிக்கும் வெய்யிலில் மனிதர் 10 நிமிடத்தில் எழுந்துவிடுவார் என்று பார்த்தால்... உடும்பு பிடியாக நகராமல் அமர்ந்துவிட்டார். 12.30....1.30.... என்று நேரம் மணிக்கணக்கில் நகர்ந்தது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் டென்சனும் கூடியது. வேறு வழியில்லாமல் கலெக்டர் உமாநாத் 2.30 மணிக்கு வந்து சேர்ந்தார். அவரிடம் மனுவைக் கொடுத்து, நடவடிக்கை எடுக்க உறுதி மொழி வாங்கிவிட்டு தான் நகர்ந்தார் எம்.எல்.ஏ... இதெல்லாம் அரசியல், ஸ்டெண்ட் என்ற விமர்சனங்களும் எழாமல் இல்லை. அப்படியே இருந்தாலும் உடலை வறுத்திக்கொண்டு போராடியது இந்த காலத்தில் பார்ப்பது அபூர்வம் தான் என்பதே என் எண்ணம்!.

April 27, 2010

பொதுமக்கள் ஊழல் பேர்வழிகளானால்...

கோவையைச் சேர்ந்த முன்னணி மருத்துவர் அவர். கோயில் ஒன்றில் சக நண்பருடன் சென்ற போது சந்தித்தேன். ஜாலியாக பேசிக் கொண்டிருந்த டாக்டர், திடீரென வருத்தத்துடன் பேச ஆரம்பித்தார்... அவரது பேச்சு நாட்டின் மீது பற்றுக் கொண்ட திருவாளர். பொதுஜனத்தின் ஆழ் மனதை எதிரொலித்தது. "தமிழ்நாடு அரசின் கோபுரச் சின்னத்தை மாற்ற வேண்டும் என்று எம்எல்ஏ ஒருவர் சட்டசபையில் பேசியிருக்கிறார். அரசு அதை மாற்றினாலும் மாற்றிவிடும். நமது அரசியல்வாதிகளுக்கு எதை எதையெல்லாம் அரசியல் ஆக்குவது என்று விவஸ்தையே இல்லை. மாநிலத்தின் சின்னமாக கோயில் கோபுரம் இருப்பதை மற்ற மதத்தினர் யாரும் இதுவரை எதிர்க்கவில்லை. அண்மையில் எகிப்து நாட்டிற்கு சென்றிருந்தேன். அந்த நாட்டில் தற்போது முழுக்க முழுக்க முஸ்லீம்கள் தான் வசிக்கின்றனர். ஆனாலும் அங்கு கட்டப்பட்டுள்ள பிரமீடுகளை எங்களது மூதாதையர்கள் கட்டியது என்று பெருமை பொங்க குறிப்பிடுகின்றனர். அவர்களது மூதாதையர்கள் வேறு வழிபாட்டு முறையை பின்பற்றியவர்கள். இருந்தாலும் மூதாதையர்களின் கலாச்சாரத்தை, பண்பாட்டை மதிக்கின்றனர். அதற்கு காரணம், அவர்களது நாட்டு பற்றுதான். ஆனால் நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கு மக்கள் மீதோ, தேசத்தின் மீதோ பற்று இருப்பதில்லை....' என்று வருத்தமாக குறிப்பிட்டவர் தொடர்ந்தார்...."நாட்டில் முதலில் அதிகாரிகள் ஊழல்வாதிகள் ஆனார்கள் பின்னர் அரசியல்வாதிகள் ஊழல் செய்தனர். நீதித்துறையே ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறது. இதையெல்லாம் கூட பொறுத்துக் கொள்ளலாம்... ஆனால் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் பொதுமக்களை ஊழல்வாதிகளாக்கிவிட்டனரே.... இதை என்னவென்பது?' என்றார். அதிகாரிகள் ஊழல் செய்யும் போது, பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.... அரசியல்வாதி ஊழல் செய்யும் போதும் அவர்களை நம்பி ஓட்டளித்த மக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். நீதித்துறையில் ஊழல் என்றால் வழக்குத் தொடுத்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதைப்போல பொதுமக்கள் ஊழல் பேர்வழிகளானால்..., அதில் பாதிக்கப்படுவது ஓட்டுக்காக அவர்களை சார்ந்திருக்கும் அரசியல்வாதிகள் தான்... கவலைப்படாதீர்கள் டாக்டர்....விரைவில் பொதுமக்களால் அரசியல்வாதிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகும்...என்ற ஆறுதல் பட்டுக் கொள்ளலாம்.

March 17, 2010

ஆஹா என்ன அரசியல் சாமி இது

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சில்வர் ஜூப்ளி பட்டமளிப்பு அரங்கு உள்ளது. இது திமுக ஆட்சிக்கு வந்ததும் கலைஞர் அரங்கம் என்று கூடுதல் பெயர் மாற்றம் செய்யப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தால் நீக்கப்படும். 2006 ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் கலைஞர் அரங்கம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது பத்திரிக்கைகளில் பெரிய அளவில் விமர்சித்து செய்திகள் வந்தன. கல்வியாளர்களும் ஆட்சி மாற்றத்திற்கு தக்கபடி வேஷம் போடுகிறார்கள் என்று விமர்சிக்கப்பட்டது. ஆனால் அது தவறு என்று அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் பேச்சிலிருந்து தெரியவந்துள்ளது.
வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பணிநிரந்தரம் செய்யப்பட்ட பண்ணைத் தொழிலாளர்கள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு பாராட்டுவிழா 17.03.2010 ல் நடத்தினார்கள். அதில் பேசிய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், "திமுக ஆட்சியின் போது சமூக நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும். ஆனால் அதிமுக ஆட்சியில் பெயர் மாற்றம் மட்டுமே நடக்கும். திமுக ஆட்சியில் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்ட கலைஞர் அரங்கின் பெயரை அதிமுக ஆட்சியில் மாற்றினார்கள். மீண்டும் நான் வேளாண்மைத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அப்போதிருந்த துணைவேந்தர்(ராமசாமி), என்னைச் சந்தித்து விழா ஒன்றில் கலந்து கொள்ள அழைத்தார். அதற்கு நான், எந்த கையால் தலைவர் கலைஞர் பெயரை மாற்ற உத்தரவு போட்டாயோ, அந்த கையாலேயே தலைவர் கலைஞர் பெயரை அரங்கிற்கு சூட்டிவிட்டு வா... அப்போது தான் நான் விழாவிற்கு வருவேன் என்று கூறிவிட்டேன். அதன்படி அரங்கிற்கு மீண்டும் கலைஞர் பெயர் சூட்டப்பட்டது. இதை கலைஞர் கண்டித்தார். ஆனாலும் நான் இந்த பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர். அதனால் பெயரை சூட்ட உத்தரவிட்டேன்....' என்று பேசினார். விழா அரங்கிலேயே முன்னாள் துணைவேந்தரை ஒருமையில் பேசிய அமைச்சர், நேரில் எப்படி கண்டித்திருப்பாரோ என்று விழாவிற்கு வந்திருந்த பேராசிரியர்கள் சிலர் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்தனர். ஆஹா என்ன அரசியல் சாமி இது!