May 31, 2010

சுட்டெரிக்கும் வெய்யிலில் 3 மணிநேரம்!

நீ.....ண்ட நாட்களுக்கு பிறகு மக்கள் பிரச்சனைக்காக மக்கள் பிரதிநிதி ஒருவர் சுட்டெரிக்கும் வெய்யிலில் 3 மணிநேரம் அமர்ந்து போராடிய காட்சியை காணமுடிந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் சேவைக்காக வந்துள்ள அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஏ.சி. அறைகளுக்குள்ளும், கார்களுக்குள்ளும் நுழைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. பசிக் கொடுமையிலும், வியர்வை நாற்றமிகுந்த பஸ் நெரிசல்களிலும், வெய்யில், மழைகளிலும் அவதிப்படும் மக்களின் துயரங்கள் இவர்களை நெருங்குவதில்லை. அதனால் தானோ என்னவோ மக்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வைத் தர எண்ணாமல் இலவசங்களை அரசியல்வாதிகள் அள்ளி எறிகிறார்கள். இவர்கள் நடத்தும் போராட்டங்களும் உடலை வறுத்தும் அளவிற்கு இல்லாமல், மீடியாக்களுக்கு போஸ் கொடுக்கும் வகையில் மட்டும் இருக்கும். சற்று வித்யாசமாக கோவை பேரூர் சட்டசபைத் தொகுதி உறுப்பினர் வேலுமணி, தனது தொகுதி குடிநீர் பிரச்சனைக்காக மக்கள் குறைதீர்க்கும் நாளான இன்று மாவட்ட ஆட்சியர் உமாநாத்திடம் மனு கொடுக்க வந்தார். வாரத்தில் முதல் வேலை நாளில் மக்களிடம் மனு பெற வேண்டும் என்பது விதிமுறை என்றாலும் செம்மொழி மாநாட்டின் வேலைப்பளுவில் மக்கள் குறை கேட்க மாவட்ட ஆட்சியருக்கு நேரமில்லை. மாவட்ட வருவாய் அலுவலர் தான் மனுக்களை பெறுகிறார். மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தாலே வேலை நடப்பது சிரமமான காலத்தில் டி.ஆர்.ஓவிடம் மனு அளிக்க எம்.எல்.ஏ.வேலுமணி விரும்பவில்லை. செம்மொழி மாநாட்டை காரணம் காட்டி மக்களின் அத்தியாவசியப் பிரச்சனைகளைக் கூட அதிகாரிகள் கண்டு கொள்ளாதது நியாயமில்லை. கலெக்டர் வந்து மனுவை பெற்று தீர்வு காணும்வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என்று கலெக்டர் அலுவலக வளாக தார்ரோட்டில் காலை 11.30 மணியிலிருந்து சுட்டெரிக்கும் வெய்யில் அமர்ந்து விட்டார். அடிக்கும் வெய்யிலில் மனிதர் 10 நிமிடத்தில் எழுந்துவிடுவார் என்று பார்த்தால்... உடும்பு பிடியாக நகராமல் அமர்ந்துவிட்டார். 12.30....1.30.... என்று நேரம் மணிக்கணக்கில் நகர்ந்தது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் டென்சனும் கூடியது. வேறு வழியில்லாமல் கலெக்டர் உமாநாத் 2.30 மணிக்கு வந்து சேர்ந்தார். அவரிடம் மனுவைக் கொடுத்து, நடவடிக்கை எடுக்க உறுதி மொழி வாங்கிவிட்டு தான் நகர்ந்தார் எம்.எல்.ஏ... இதெல்லாம் அரசியல், ஸ்டெண்ட் என்ற விமர்சனங்களும் எழாமல் இல்லை. அப்படியே இருந்தாலும் உடலை வறுத்திக்கொண்டு போராடியது இந்த காலத்தில் பார்ப்பது அபூர்வம் தான் என்பதே என் எண்ணம்!.

No comments: