March 17, 2010

ஆஹா என்ன அரசியல் சாமி இது

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சில்வர் ஜூப்ளி பட்டமளிப்பு அரங்கு உள்ளது. இது திமுக ஆட்சிக்கு வந்ததும் கலைஞர் அரங்கம் என்று கூடுதல் பெயர் மாற்றம் செய்யப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தால் நீக்கப்படும். 2006 ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் கலைஞர் அரங்கம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது பத்திரிக்கைகளில் பெரிய அளவில் விமர்சித்து செய்திகள் வந்தன. கல்வியாளர்களும் ஆட்சி மாற்றத்திற்கு தக்கபடி வேஷம் போடுகிறார்கள் என்று விமர்சிக்கப்பட்டது. ஆனால் அது தவறு என்று அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் பேச்சிலிருந்து தெரியவந்துள்ளது.
வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பணிநிரந்தரம் செய்யப்பட்ட பண்ணைத் தொழிலாளர்கள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு பாராட்டுவிழா 17.03.2010 ல் நடத்தினார்கள். அதில் பேசிய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், "திமுக ஆட்சியின் போது சமூக நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும். ஆனால் அதிமுக ஆட்சியில் பெயர் மாற்றம் மட்டுமே நடக்கும். திமுக ஆட்சியில் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்ட கலைஞர் அரங்கின் பெயரை அதிமுக ஆட்சியில் மாற்றினார்கள். மீண்டும் நான் வேளாண்மைத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அப்போதிருந்த துணைவேந்தர்(ராமசாமி), என்னைச் சந்தித்து விழா ஒன்றில் கலந்து கொள்ள அழைத்தார். அதற்கு நான், எந்த கையால் தலைவர் கலைஞர் பெயரை மாற்ற உத்தரவு போட்டாயோ, அந்த கையாலேயே தலைவர் கலைஞர் பெயரை அரங்கிற்கு சூட்டிவிட்டு வா... அப்போது தான் நான் விழாவிற்கு வருவேன் என்று கூறிவிட்டேன். அதன்படி அரங்கிற்கு மீண்டும் கலைஞர் பெயர் சூட்டப்பட்டது. இதை கலைஞர் கண்டித்தார். ஆனாலும் நான் இந்த பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர். அதனால் பெயரை சூட்ட உத்தரவிட்டேன்....' என்று பேசினார். விழா அரங்கிலேயே முன்னாள் துணைவேந்தரை ஒருமையில் பேசிய அமைச்சர், நேரில் எப்படி கண்டித்திருப்பாரோ என்று விழாவிற்கு வந்திருந்த பேராசிரியர்கள் சிலர் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்தனர். ஆஹா என்ன அரசியல் சாமி இது!

No comments: