March 6, 2010

எது நிஜம்?

கோவை பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கடந்த பல ஆண்டுகளாகவே ஒரு விஷயத்தில் பலத்த சர்ச்சை இருந்து வருகிறது. பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் பத்திரிக்கைகளிலேயே பணிபுரியாத பலரும் வலம் வருகிறார்கள். அவர்களை களை எடுக்க வேண்டும் என்றும் பல நிருபர்கள் குரல் எழுப்பி வந்தனர்.... தற்போதும் குரல் எழுப்புகின்றனர். ஆனால் "போலி பத்திரிக்கையாளர்' என்பதற்கு இலக்கணம் வகுப்பதில் தான் பலத்த சிக்கல். ஒரு பத்திரிக்கையின் விற்பனை பிரதிகளின் எண்ணிக்கையை வைத்தா, அல்லது "கவர்' மற்றும் அன்பளிப்புகள் வாங்குவதை வைத்து முடிவு செய்வதா என்பதில் தான் குழப்பம். பத்திரிக்கையின் சர்குலேசன் எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம் எப்போது வேண்டுமானாலும் குறையலாம் அதனால் அதை வைத்து முடிவு செய்ய முடியாது. அன்பளிப்புகளை பல ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் சில பத்திரிக்கையாளர்களும் வாங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளதால் அதை வைத்து எப்படி முடிவு செய்வது என்ற திண்டாட்டமும் நிலவுகிறது. பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் வலம் வரும் பலர் அவர்கள் பணிபுரியும் அலுவலகத்திலிருந்து சம்பளமே வாங்குவதில்லை என்றும், பத்திரிக்கையாளர் என்ற பெயரில் அவர்கள் செய்யும் வசூலில் தான் வாழ்க்கை ஓடுகிறது என்றும் கூறுகிறார்கள். பல பத்தாயிரங்கள் சம்பளம் வாங்குபவர்களே வசூலில் ஈடுபடும் போது, சம்பளமே இல்லாதவர்கள் கொஞ்சம் வசூலித்தால் தான் என்ன என்றும் அவர்களுக்கு ஆதரவு குரல் எழாமல் இல்லை. ஆனால் இந்த இரண்டு தரப்பிற்கும் இடையே லஞ்சம் வாங்காத நேர்மையான பத்திரிக்கையாளர்கள் மாட்டிக் கொண்டு திண்டாடுவதும் அவ்வப்போது நடக்கும். எல்லா பத்திரிக்கையாளர்களும் லஞ்சம் வாங்குவார்கள் என்று கருதி லஞ்சம் வாங்காத பத்திரிக்கையாளர்களுக்கு செய்தி வெளியிட லஞ்சம் கொடுக்க சிலர் முயலுவதும், அது சர்ச்சைக்குள்ளாவதும் நடக்கிறது. இது இவ்வாறு இருக்க... சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சியினரால் மக்கள் டிவி அலுவலகம் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கோவை செஞ்சிலுவை சங்க கட்டிடம் முன்பு பத்திரிக்கையாளர்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் ஒரு ஆச்சரியம். யார் யாரையெல்லாம் போலி பத்திரிக்கையாளர்கள் என்று குற்றம்சாட்டி போராட்டம் நடத்தியவர்கள், அந்த பத்திரிக்கையாளர்களுக்கு அங்கீகாரம் அளித்த கதை நடந்தது. இதைப்பார்த்து என்னைப்போன்ற பலருக்கு தலை சுற்றியது.... "அன்று போலிக்கு எதிராக என்று நடத்திய போராட்டம் நிஜமா? அல்லது இன்று அளிக்கும் அங்கீகாரம் நிஜமா?'

No comments: