March 1, 2010

தாய்மை

பத்திரிக்கை அலுவலகங்களுக்கு தினசரி பல பத்திரிக்கை செய்திகள் வருவதுண்டு... சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி ஈசா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவின் அறிக்கை என்னை கவர்ந்தது....
'ஒரு முறை யோக வகுப்பு எடுத்தபோது, பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டார்கள். அப்போது ஒரு பெண்மணி தன் பெயரை சொல்லிவிட்டு பிறகு தன்னை வெறும் என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். அதென்ன வெறும் குடும்பத்தலைவி, உங்களுக்கு அதன் அருமை தெரியவில்லை, வெளியில் சென்று பணம் சம்பாதிக்காததால் நீங்கள் இப்படி நினைத்துக் கொள்கிறீர்கள் என்று பதில் கூறினேன். தங்கள் ஆதிக்கம் செலுத்தப்படுவதாக நினைத்ததால்தான் பெண்கள் ஆண்கள் செய்யும் செயல்களை செய்ய முற்படுகிறார்கள். தற்போது உலகில் பல பெண்ணிய இயக்கங்கள் செயல்பட ஆரம்பித்திருக்கின்றன. ஆனால் அந்த இயக்கங்கள் உண்மையாகவே பெண்களின் நலனுக்காக செயல்பட வேண்டுமானால், அவை பெண் தன்மையை மேலுயர்த்துவது எப்படியென சிந்தித்து செயல்பட வேண்டும். நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது, எங்கள் தாயார் காலை 6 மணிக்கு எழுந்து விடுவார். வீட்டை சுத்தம் செய்து, சிற்றுண்டி தயாரித்து எங்களை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, பிறகு குளித்து பூஜை செய்து மீண்டும் உணவு தயாரித்து 12 மணி அளவில் நிமிரும்போது, என் தந்தை சரியாக வீட்டிற்கு வருவார். எப்போதும் என் தந்தை வருவதற்கு முன் அவர் நன்றாக உடை அணிந்து கொண்டு தலையில் பூ சூடியிருப்பார். இது எப்போதும் நடந்தது. இந்த வேலைகள் எப்போதும் அவருக்கு ஆனந்தத்தைத் தந்தது. எங்கள் நல்வாழ்விற்காக தன்னை ஒருவர் இந்த அளவு அர்ப்பணித்திருக்காவிட்டால் எங்கள் வாழ்வு எப்படி இருந்திருக்கும் என்பதை எங்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அவருடைய அர்ப்பணிப்பு எங்கள் வாழ்க்கையை ஒவ்வொரு படியிலும் உயர்த்தியது. அவர் வருமானம் ஈட்டாததால் அவரை யாருக்கும் தாழ்ந்தவராக நினைக்க முடியாது, கண்டிப்பாக முடியாது. அவருடைய தீவிர அர்ப்பணிப்பே மற்ற அனைவரையும் விட அவரை அதிகமாக உயர்த்திக் காட்டியது. வீட்டில் எது நடந்தாலும் அவரை கலந்தாலோசித்துத்தான் அது நடக்கும். ஏனெனில் மற்றவர் மீது அவர் கொண்டிருந்த அக்கறை அத்தகையது. இதுதான் ஒருவருடைய வாழ்க்கையை உயர்த்துகிறது. பெண் விடுதலை இயக்கத்தை சேர்ந்தவர்கள் என் தாயாரிடம் நீ ஒரு அடிமை போல் இருக்கிறாய், ஊதியம் இன்றி வேலை செய்கிறாய், நீ பயன் படுத்தப்படுகிறாய் என்றெல்லாம் சொன்னால், அவர் மிகவும் எதிர்ப்பு தெரிவித்திருப்பார். ஏனெனில் அவரைப் பொறுத்த வரையில் அவர் வீட்டில் செய்து வந்த பணிகள் அவருக்கு அன்பு மயமான அனுபவத்தை கொடுத்தது. இப்படி சிலர் தன் நலத்தையும் தாண்டி அன்புடனும் அக்கறையுடனும் ஈடுபடும்போதுதான் இந்த உலகம் அழகானதாக இருக்கிறது. அதற்காக எல்லா பெண்களும் வீட்டிலேயே இருந்து கொள்ள வேண்டும், ஆண்கள் மட்டும் வெளியே செல்ல வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. நீங்கள் வாழும் வாழ்க்கை மற்றவர் வாழ்க்கையில் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டு வருகிறது என்றால் நீங்கள் அலுவலகத்திற்கு சென்றாலும் சரி, அல்லது வீட்டிலேயே இருந்து கொண்டாலும் சரி அது ஒரு பொருட்டல்ல. பெண்கள் ஆண் தன்மை கொண்டவர்களாக மாறி பெண் தன்மையே இல்லாமல் செய்துவிட்டால் அதுதான் உலகில் பெண்தன்மைக்கு கிடைக்கப்போகும் உண்மையான தோல்வியாக இருக்கும். பெண் தன்மை என்பது தேவையற்றதும் இல்லை. பலவீனமானதும் இல்லை. பெண்தன்மை வித்தியாசமானது. மென்மையானது. இவ்வுலகில் பெண்தன்மை இல்லாமல் செய்துவிட்டால் மென்மையில்லாத வாழ்க்கையிலும் மென்மையில்லாத உலகிலும் நாம் எப்படி வாழ்வது? பெண்மை எப்போதும் எளிதாக விட்டுக் கொடுக்கிறது. உலகில் பெண்மை மீது மட்டும்தான் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது என்று நினைக்கிறீர்களா? அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தத்தான் மக்கள் நினைக்கிறார்கள். ஆண்களையும் வேறு ஆண்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள், எல்லா மட்டத்திலும் ஆதிக்கம் என்பது இருக்கத்தான் செய்கிறது. குழந்தைகள் மீது, ஆண்கள் மீது, பெண்கள் மீது, மிருகங்கள் மீது, தாவரங்கள் மீது யாரோ ஆதிக்கம் செலுத்தத்தான் செய்கிறார்கள். ஏதாவது ஒன்று ஆதிக்கம் செலுத்தப்படுகிறது என்பதற்காக அதை இல்லாமலே செய்துவிடலாமா? பூக்களைப் பறித்து மாலை செய்கிறார்கள். யாரோ பூக்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதற்காக, பூக்களே இல்லாமல் செய்து விடலாமா? அதே போல் பெண்மை மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதற்காக பெண்மையே இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லதுதானா? எனவே இவ்வளவு காலமாக நிலவிய ஆணாதிக்கத்திற்கு எதிர்செயலாக செயல்படாமல் இனிமேல் பெண்கள் நலமாய் வாழ என்ன செய்யவேண்டும் என்பதை கவனித்து செயல்பட்டால் வாழ்க்கை மிக நன்றாக இருக்கும்... பெண்மையின் மீது யாரும் ஆதிக்கம் செலுத்தவில்லை என்று நான் சொல்ல வரவில்லை. அது உலகில் இருக்கத்தான் செய்கிறது. அதை ஒரு நாளில் மாற்ற முடியாது. ஆனால் உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் தீமையை நீங்கள் நினைத்தால் ஒரு வினாடியில் நிறுத்திக் கொள்ளலாம். மக்கள் பல நேரங்களில் பெண்மை மிகுந்த வலிமை குன்றியது என கருத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. பணியில் ஆகட்டும், வியாபாரத்தில் ஆகட்டும், நீங்கள் கடைபிடிக்கும் வழி பெண்மை நிறைந்ததா ஆண்மை நிறைந்ததா என யாரும் கவனிப்பதில்லை. நீங்கள் கடைபிடிக்கும் வழியில் பலன் கிடைக்கிறதா, இல்லையா என்பதைத்தான் உலகம் கவனிக்கிறது. பெண் விடுதலை என்று பாடுபடுபவர்கள் பெண்மை தழைத்தோங்க பெரிய சேவை செய்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. பெண்கள் அமைப்புகள் நடத்திய சில கூட்டங்களில் நான் பங்கு பெற்றிருக்கிறேன். அப்போதெல்லாம் அவர்கள் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அவர்கள் பேச்சு பெண்மை நிறைந்ததாக இல்லை. ஆண்களை விட இவர்கள் அதிகம் ஆண்மை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். மிகவும் கடுமை நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். இது பெண்மைத் தன்மையல்ல. உண்மையில் ஒரு ஆண் கூட சிறிது விட்டுக்கொடுக்க நினைப்பார். ஆனால் இவர்கள் ஒரு ஷணம் கூட விட்டுக்கொடுக்க விரும்புவதில்லை. ஆணோ பெண்ணோ 100 சதவீதம் ஆண்மை நிறைந்தவர்களோ அல்லது 100 சதவீதம் பெண்மை நிறைந்தவர்களோ கிடையாது. ஆண் என்பவனுக்கு ஆண்மை அதிக சதவீதத்தில் இருக்கிறது, பெண் என்பவளுக்கு பெண்மை அதிக சதவீதத்தில் இருக்கிறது. உலகில் பிழைக்கும் வழிதான் முக்கியமாக இருக்கும்போது ஆண்மைதான் மேலோங்கியிருக்கும். பெண் எப்போதும் பிழைப்புக்கான வழிக்காக துரத்தப்படுவதில்லை. அவள் தளர்வு நிலையில் இருக்கமுடியும். ஆணுக்கும் இது தேவைப்படுகிறது. அவனுக்கு இது பெண் மூலமாக தேவைப்படுகிறது. அவன் பிழைப்புக்கான வழியில் ஈடுபட்டு, எதாவது சம்பாதித்தால், அதை வீட்டிற்கு கொண்டுவந்து தளர்வடையவே முயற்சிக்கிறான். பெண்மை இல்லாமல் அவன் தளர்வடைவது முடியாது. இசை, கலை, அன்பு, அக்கறை ஆகியவை பொருளாதாரம் போன்று எப்போது மேலோங்கி இருக்கிறதோ அப்போது ஆணுக்கு நிகராக பெண்ணின் பங்கும் இருக்கும். எனவே பெண்களோ அல்லது பெண் இயக்கங்களோ பெண்மையை தழைத்தோங்கச் செய்வதையே கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் ஏற்றுக்கொள்ளும் தன்மையும் அர்ப்பணிப்பும் பெண்களுக்கு இயல்பாகவே இருக்கிறது. இவ்விரு தன்மைகளையும் தன்னுள் மேம்பட்ட நிலைக்கு கொணரும்போது பெண் என்பவள் பராசக்தியாக பரிணமிக்க முடியும். அந்தநிலை வரும்போது இந்த உலகம் வாழ்வதற்கு மிகவும் ஆனந்தமானதாக இருக்கும். '
***

No comments: