மரபணு மாற்றப்பட்ட கத்தரி ரகத்தை பயிரிட அனுமதிப்பது குறித்த பொறுப்பு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷிடம் ஒப்படைக்கப்பட்டதிலிருந்து மனிதர் தினசரி பத்திரிக்கைகளில் அடிபடும் பரபரப்பான மினிஷ்டர் ஆகிவிட்டார். பி.டி கத்தரிக்கு அவர் தற்காலிக தடைவிதித்தப் பின்னரும் எங்கு சென்றாலும் அவரிடம் பத்திரிக்கையாளர்கள் பி.டி.கத்தரி குறித்து கேட்கத்தவறுவதில்லை. மனிதரும் அசராமல் ஒவ்வொரு இடத்திலேயேயும் தான் கூறியதையே திரும்ப திரும்ப கூறிவருகிறார். ஆனால் பத்திரிக்கையாளர்கள் புரிந்து கொள்வதில் தான் வித்யாசம் உள்ளது. "பி.டி.கத்தரியை அனுமதிப்பது குறித்து கருத்து கேட்கப்பட்டபோது எந்த முதல்வரும் அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. விஞ்ஞானிகளும் சந்தேகங்களை கிளப்புகின்றனர். பொதுமக்களும் எதிர்கின்றனர். அதனால் பி.டி.கத்தரி குறித்து மேலும் ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது. இந்த கத்தரியால் உடல் நலத்திற்கு ஆபத்து இல்லை என்ற உறுதியும், விதைகளுக்கு வெளிநாட்டு நிறுவனங்களை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற உறுதியும் கிடைக்க வேண்டும். அதுவரை பி.டி.கத்தரி பயிரிட அனுமதிக்க முடியாது. அதேசமயம் மற்றப்பயிர்களில் பி.டி. ஆராய்ச்சிக்கு தடை விதிக்க முடியாது...' என்பதை தான் அவர் தொடர்ந்து கூறிவருகிறார். ஆனால் ஒரு நாள் பி.டி.கத்தரிக்கு தடையில்லை என்றும், தடை என்றும் மாறி மாறி செய்திகள் வந்து கொண்டுள்ளன. கோவை வனக்கல்லூரியில் உள்ள வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் மரம் வளர்ப்பு குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட ஜெய்ராம் ரமேஷ், டென்சன் ஏதுமில்லாமல் மிக ஜாலியாகவே இருந்தார். தமிழ், மலையாளம், கன்னடம், ஒரியா, தெலுங்கு போன்ற மொழிகளில் பேசினால் தனக்கு புரியும் என்று கூறி மற்றவர்களை தமிழ், மலையாளத்திலேயே பேச கூறியவர், அவர் மட்டும் ஆங்கிலத்தில் பேசினார். பேசும் போதும் ஜோக்குகளை அள்ளிவீசத் தயங்கவில்லை. ஆஸ்திரேலியாவில் படிக்கச்செல்லும் இந்திய மாணவர்கள் அங்கு அடிவாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நாம் ஆஸ்திரேலியாவிலிருந்து பெற்றோர்களை கொண்டு வந்து(சவுக்கு, தைல மர ஜீன்களை) இந்திய குழந்தைகளை உருவாக்கியுள்ளோம்(ரசிக்க முடியாத ஜோக் தான்) என்று கூறி பார்வையாளர்களை ரசிக்க வைத்தார். அதற்கு பின்னர் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் உற்சாகமாகவே கலந்து கொண்டார். "பி.டி.கத்தரிக்கு தடைவிதித்ததால் பத்திரிக்கை ஒன்று( ஆங்கில பத்திரிக்கை) விமர்சித்து எழுதுகிறது. அந்த பத்திரிக்கை நிருபர்கள் யாவாது வந்திருக்கிறீர்களா..?' என்று கேட்டுவிட்டு ஜாலி மூடில் பிரஸ் மீட்டை ஆரம்பித்தார். பி.டி. பற்றி ஒரு நிருபர் கேள்வி எழுப்பியதும் சற்று முகத்தில் கோபத்தை காட்டியவர் பின்னர் நிதானித்து பதில் அளித்தார். பார்ப்பதற்கு சற்று ஜோக்கர் மாதிரி தோன்றினாலும் நிலமையை திறமையாக சமாளிக்கிறார் என்கிறார்கள் சக பத்திரிக்கையாளர்கள்.
No comments:
Post a Comment