ஏ.ஜி.பொன்மாணிக்கவேல்!
தமிழக காவல்துறையில் நேர்மையாக இருப்பதோடு, ஊழலுக்கு எதிராக ஒரு "யுத்தமே'நடத்தி வருபவர். கோவையில் அவர் மூன்று மாதங்கள் ரூரல் எஸ்பியாக பணி புரிந்த போது எனக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் நான் பல போலீஸ் அதிகாரிகளிடம் பழகியிருக்கிறேன். ஆனால் அவர்களின் பேச்சிற்கும் செயலிற்கும் பெரும் வித்யாசம் இருப்பது சிறிது காலத்திலேயே தெரிந்துவிடும். ஆனால் பொன்மாணிக்கவேல் இவர்களில் மிகவும் வித்யாசமானவர். இவர் பணியில் உள்ள ஒவ்வொரு விநாடியும் பொதுமக்களுக்கு நன்மை விளைந்து கொண்டே இருக்கும். போலீஸ் அதிகாரியால் மக்களுக்கு என்ன சேவை செய்ய முடியும் என்பதை கண்முன்னால் காண்பித்தவர். போலீஸ் துறையில் லஞ்சம் வாங்காமல் இருப்பது சாத்தியம். ஆனால் லஞ்சத்திற்கு எதிராக போராடுவது என்பது வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்குவது போல. பொன்மாணிக்கவேல் நேர்மையாக இருப்பதற்கு கொடுத்து வரும் விலை சற்று அதிகம் தான். எந்த ஒரு பதவியிலும் நிரந்தரமாக 3 மாதங்களுக்களுக்கு மேல் இருக்க அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் விடுவதில்லை. அதனால் இவரது மனைவி, குழந்தையை விட்டு தொலைதூரத்தில் வசிக்க வேண்டியிருக்கிறது. ரவுடிகளை என்கவுண்டர் செய்த விவகாரத்தில் சக அதிகாரி ஒருவரின் விளையாட்டால் பல வழக்குகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. இதைவிட இவரது பதவி உயர்வு கூட தேவையில்லாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. பொதுவாக எஸ்பிக்கு பிறகு டிஐஜி பதவி உயர்வு வழங்கப்படும். ஆனால் இவருக்கு எஸ்எஸ்பி என்ற ஸ்பெஷல் எஸ்பி பதவியுயர்வு வழங்கப்பட்டது. பின்னர் ஒரு வழியாக 15.02.10 அன்று டிஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு பழனி பட்டாலியனிலிருந்து சென்னை ரயில்வே போலீஸ் டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் இவர் எந்த பதவியில் இருந்தாலும் அங்கு ஊழலை முற்றிலும் ஒழித்துவிடுவார். நேரடியாக மக்களைச் சந்திக்கும் சட்டம்ஒழுங்கு பதவிகளில் இல்லாதது இவருக்கு இழப்பல்ல... மக்களுக்குத் தான் இழப்பு!
No comments:
Post a Comment