February 9, 2010

விடுதலை புலிகள் தலைவர் இருக்கிறாரா?

சுழல் விளக்கு...முன்னும் பின்னும் கைத்தடிகள்... பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் வெட்டி பந்தா.... கொள்கைகள் ஏட்டளவில் மட்டும், பேச்சுக்கும் செயலுக்கும் தொடர்பே இருக்காது இது தான் தமிழகத்தின் அரசியல் நிலை. சினிமாக்களில் அரசியல்வாதிகள் குறித்த கதாபாத்திரங்கள் அனைத்தும் நிஜம் தான், கற்பனை இல்லவே இல்லை என்று தமிழக அரசியலை நன்கறிந்தவர்கள் தங்கள் தலைமீது சத்தியம் செய்து கூறுவார்கள். ஆனால் மலேசியாவிலிருந்து வந்திருந்த தமிழர்களான அரசியல் தலைவர்களையும், இயக்கங்களின் தலைவர்களையும் பார்த்து பேசிய போது வியப்பு ஏற்பட்டது. கோவையில் நடந்த உலக தமிழர் பாதுகாப்பு மாநாட்டிற்கு வந்திருந்த இன்ட்ராப் தலைவர்கள் வசந்தகுமார், கணபதிராவ் ஆகியோரிடம் பேட்டி எடுத்தேன். அப்போது அவர்களுக்குள் இருந்த கொள்கை வேட்கை, லட்சியப்பிடிப்பு என்னை கவர்ந்தது. குறிப்பாக வசந்தகுமார், "இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தேன், 7 மாதங்கள் வீட்டுச்சிறைவாசம், இனியும் சிறை செல்ல வேண்டியிருந்தாலும் போராட்டத்தை தொடருவோம்' என்றது வெறும் வாய்வார்த்தை மட்டுமல்ல என்று உணர முடிந்தது. இன்ட்ராப்பில் தங்களுடன் இணைந்து செயல்பட்டு பிரிந்து சென்ற வேதமூர்த்தி, உதயக்குமார் ஆகியோர் குறித்து அவர் விமர்சிக்காதது நம்ம ஊர் அரசியல் தலைவர்களின் குழாயடிச் சண்டையை ஓப்பிட்டு பார்க்கத் தோன்றியது.

அடுத்து நான் சந்தித்து பேசியது பினாங்கு துணை முதல்வர் ராமசாமி அவர்களிடம், "நாங்கள் பதவியேற்றதும் ஒரு முடிவெடுத்தோம்... தேர்வு செய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் பதவிக்காலத்தில் ஒரு சிறிய சொத்து கூட வாங்குவதில்லை என்றும், ஊழலை 0 சதவீதமாக்குவது என்றும் முடிவெடுத்துள்ளோம். அதன்படி செயல்பட்டு வருகிறோம்...' எங்கள் ஊரில் அது போன்று முடிவெடுத்தால் "ரியல் எஸ்டேட் பிசினஸ் படுத்துவிடுமே ஐயா என்று கூறத்தோன்றியது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்த கேள்விகளுக்கும் அவர் தெளிவாகவே பதில் அளித்தார். நார்வே அமைதிக்குழு ஆலோசகர், பிரபாகரனை பல முறை சந்தித்தவர், விடுதலைப்புலிகளின் பகிரங்க ஆதரவாளர் என்று பல தகுதிகளுடைய அவர் பிரபாகரன் குறித்து தெரிவித்ததை அப்படியே கீழே குறிப்பிட்டுள்ளேன். பிரபாரனின் நிலை என்ன என்பது குறித்து அவரது வார்த்தைகளிலிருந்து புரிந்து கொள்ள முயற்சிப்போம்...."விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது எனக்கு தனியாத பாசம் உண்டு. அவர் உயிருடன் இருக்கிறார் என்று தெரிந்தால் என்னைவிட அதிக மகிழ்ச்சியடைபவர் உலகில் வேறு யாரும் கிடையாது. ஆனால் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று வைகோ, நெடுமாறன், திருமாவளவன் ஆகியோர் பேசி அரசியல் செய்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்பதே என் கருத்து. பிரபாகரன் இறந்து விட்டார் என்று தற்போது கூறினாலும் மக்கள் நம்ப மாட்டார்கள். நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் விமான விபத்தில் இறந்தார் என்பதை மக்கள் நம்பவில்லை. பிரபாகரன் இறந்துவிட்டார் என்று தெரியவந்தால், ஈழத்தமிழர்களுக்கான போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிடலாமா? ஈழத்தமிழர்களின் நலன் தான் முக்கியம். அவர்களுக்கு உடனடியாக தனிநாடு கிடைக்காவிட்டாலும் அடிப்படை உரிமைகள் கிடைக்க தமிழ் தலைவர்கள் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும்......' என்று முடித்த அவரது குரலில் உண்மையான ஆதங்கம் இருந்தது.



பாலோஅப்



இன்ட்ராப்-மக்கள் சக்தி!





மலேசியாவில் இந்தியர்கள் இழந்த உரிமையை மீட்பதற்காக துவங்கிய இன்ட்ராப் அமைப்பின் தலைவர்களில் வசந்தகுமார், கணபதிராவ் ஆகியோர் கோவையில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டிற்கு வந்த போது சந்தித்த அனுபவங்களை குறிப்பிட்டிருந்தேன். அதன்பின்னர் இன்ட்ராப்பின் செயல்பாடுகள் குறித்து வலையில் தேடியபோது இன்ட்ராப்மக்கள் சக்தியின் வலைத்தளத்தை காண முடிந்தது. இந்தியர்கள் தங்களின் பிரச்சனைகளுக்காக போராட ஒன்று திரளும்போது கூட ஏதாவது ஒரு காரணத்திற்காக பிளவுபட்டு போவது தொடர்ந்து நடந்து வருகிறது. இன்ட்ராப் விஷயத்திலும் இது தான் நடந்துள்ளது. இந்திய சமுதாயத்தில் பிளவு ஏற்படும் போது போராட்டங்களின் வீரியம் குறைந்து தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வதிலேயே நேரம் விரயமாகும். இதுவே வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும் என்பது வரலாறு காட்டும் உண்மை. ஆனால் வரலாற்றை தொடர்ந்து மறந்து வருவது தான் நமது பலவீனம்!

No comments: