August 18, 2010

காங்கிரஸ்... நல்ல காங்கிரஸ்...!

மிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சற்று வித்யாசமான அனுபவம் தான். 16.8.10 அன்று கோவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சி.சுப்பிரமணியத்தின் நூற்றாண்டுவிழா பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய அவர் நிருபர்களைச் சந்தித்தார்.
ராகுல்காந்தி நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் செய்ததற்காக கோவை ஜெயில் மைதானத்திற்கு வாடகையை இதுவரை செலுத்தாமல் இருப்பது
, அடுத்த தேர்தல் கூட்டணியிலாவது அமைச்சரவையில் பங்கு குறித்து தேர்தலுக்கு முன்பே ஒப்பந்தம் போடுவது, கோஷ்டி பிரச்சனை என்று காட்டமான கேள்விகள் கையில் இருந்தாலும் சில கேள்விகளுக்கு பின்னர் கேட்கலாம் என்றிருந்தோம்.
ஆனால் துவக்கத்திலேயே நூற்றாண்டுவிழா கூட்டம் ஜெயில் மைதானத்தில் நடக்கும் என்று அவர் அறிவிக்க வேறு வழியில்லாமல் முதல்கேள்வியாக, "ஜெயில் நிர்வாகத்திற்கு பழைய பாக்கியை செட்டில் செய்யாமல் இருப்பது ஏன்?' என்று கேட்கவேண்டியதாயிற்று.... ஆனால் அவர் அளித்த பதிலைத்தான் என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
"அரசு விழா நடத்தினால் அரசு வாடகை செலுத்தும், அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்தினால் அரசியல் கட்சிகள் தான் வாடகை செலுத்த வேண்டும்.... இது எங்களுக்கு தெரியும். இதில் தவறு நேர்ந்திருந்தால் சரி செய்யப்படும். முதலில் அவர்கள்(ஜெயில் நிர்வாகம்) தாக்கீது அனுப்புவார்கள்... அது கிடைத்தவுடன் நாங்கள் கட்டணத்தை செலுத்தவிடுவோம். எங்கள் கட்சி பாரம்பரியம் மிக்கது. இதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. அவர்கள் தாக்கீது அனுப்பியுள்ளார்களா என்பது குறித்து கூற முடியாது...' எவ்வளவு தெளிவான பதில். அமைச்சரவை இடம் குறித்து அடுத்த கேள்வியை கேட்டதற்கு பக்கத்தில் இருந்த எம்.எல்.ஏ. கந்தசாமி உட்பட பலர் சிரித்தாலும், "தேர்தல் கூட்டணி குறித்து இப்போது பேச முடியாது. இன்னும் ஒரு ஆண்டு உள்ளது. இது குறித்து சோனியாகாந்தி முடிவு செய்வார்...' என்றே பதில் அளித்தார் தங்கபாலு. இது போன்ற எத்தனை கேள்விகளை வீசினாலும் சிரித்தபடியே பதில் அளித்து சமாளித்தார் அவர். ஆனால் என்ன, நியூர் ஒன்னும் தேரலை என்று பல நிருபர்கள் புலம்பியபடி சென்றனர்.
கொசுறு: அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் தங்கள் பலத்தை கோவையில் காட்டிவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியும் களத்தில் இறங்கியிருப்பதால் பெருங்கூட்டத்தை கூட்டிவிடுவார்கள் என்று எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் அந்த நம்பிக்கை தங்கபாலுவுக்கே இல்லை போலும்.... எத்தனை பேர் கூட்டத்திற்கு வருவார்கள் என்று கேட்டதற்கு, மற்ற கட்சிகளைப் போல மாநில அளவில் ஆட்களை அழைத்து வந்து கூட்டம் நடத்தமாட்டோம். கோவை மாநகர காங்கிரஸ் சார்பில் உண்மையான காங்கிரஸ் கட்சியினர் மட்டும் கலந்து கொள்வார்கள் என்று சற்று பாதுகாப்பாக பதில் அளித்தார். பின்னர் வாசன் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது உண்மை நிலை வெளிபட்டது....
"சி.எஸ். நூற்றாண்டுவிழா என்று கூறி அனைத்து தரப்பினரையும் சேர்த்து கூட்டம் நடத்த தங்கபாலுவும், ப.சிதம்பரமும் திட்டமிட்டுள்ளனர். பிரணாப் முகர்ஜி வருவதால் அவருக்கு நெருக்கமான வாசனும் வந்துவிடுவார். அதனால் எங்கள் ஆதரவில் கூட்டத்தை திரட்டி தங்களுக்கு செல்வாக்கு உள்ளது போல மேலிடத்தில் காண்பிக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள். நாங்கள் ஏமாறமாட்டோம். வாசன் வந்தால், நிர்வாகிகள் மட்டும் கூட்டத்தில் கலந்துகொள்வோம்...' என்றார் அவர். தலை சுற்றியது எனக்கு!

No comments: