August 18, 2010

வில்லங்கவரி

சக பத்திரிக்கையாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட சுவராஸ்யமான அனுபவங்களை கூறினார்கள். அவற்றில் இரண்டு மட்டும் இங்கே... *ஒரு ஆண்டு ஆகிறது அந்த சம்பவம் நடந்து. கோவை மாநகரில் நோ பார்க்கிங் பகுதியில் ஒரு பெண்மணி காரை நிறுத்தினார். கடமைவீரர்களாக சென்ற காவல்துறை காரின் சாவியை பறித்துக் கொண்டது. காரின் சாவியை திரும்ப பெற அந்த பெண்மணி போராடியும் பலனில்லை. இந்த தகவல் நிருபர்களை எட்ட, நிருபர் படை அங்கே விரைந்தது.
ஒரு மணிநேர போராட்டம், நிருபர்களின் வருகை இவற்றிற்கு பின்னர் காரின் சாவியை மீட்டுத்திரும்பினார் அந்த பெண்மணி. அடுத்த நாள் அனைத்து பத்திரிக்கைகளிலும் இது செய்தியாக வெளிவந்திருந்தது. அனைத்து நாளிதழ்களிலும் ஒரே மாதிரி செய்தி வந்திருக்க... ஒரு நாளிதழில் மட்டும் கார் பெண்மணியின் மீது பரிதாபத்தை ஏற்படுத்தும் விதமாக ஒரு வரி சேர்க்கப்பட்டிருந்தது. அந்த செய்தியை படித்ததும் கார் பெண்மணி கொதித்து போனார். தனது தந்தையை அழைத்துக் கொண்டு, செய்தி வெளிவந்த அனைத்து பத்திரிக்கைகளுடன் குறிப்பிட்ட நாளிதழின் அலுவலகத்திற்கு சென்று செய்தி ஆசிரியரைச் சந்தித்து இப்படி எழுதிவிட்டீர்களே.... என்று கோபத்துடனும், அழுகையுடனும் அவர் சண்டைக்கு போனார். அவருடன் வந்த அவரது தந்தையின் கண்களிலும் தாரை தாரையாக கண்ணீர். என்ன நடந்தது என்று செய்தி ஆசிரியருக்கு புரியவில்லை.
சம்மந்தப்பட்ட நிருபரை வரவழைத்தார். விசாரணை நடந்தது. "சார் நான் ஸ்பாட்டிற்கு சென்று தான் எழுதினேன். இதில் தவறு ஏதும் இல்லை' என்றார் அந்த நிருபர். "ஐயா என் மகள் கணவனை பிரிந்து 3 ஆண்டுகளாகிறது. இந்த நிலையில் இப்படி எழுதலாமா? என் மகள் மீண்டும் கணவனுடன் சேர்ந்து வாழ முடியாதபடி செய்துவிட்டீர்களே...' என்று தந்தை புலம்ப... அப்போது தான் நிருபருக்கு இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று புரிந்தது. "கார் சாவியை பெற ஒரு மணிநேரம் போராடிய அந்த பெண்மணி கர்ப்பிணி என்பது குறப்பிடத்தக்கது...' என்ற வரி தான் வில்லங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நிருபருக்கு புரிந்து போனது. எடிட்டரும் மறுப்பு செய்தி வெளியிடுவதாக சமாதானப்படுத்தி அவர்களை அனுப்பி வைத்துவிட்டு நிருபரை பிடிபிடியென பிடித்துக் கொண்டார். "சார், அந்த பெண்ணிற்கு வயறு பெரிதாக இருந்தது அதனால் தான் கர்ப்பிணி என்று நினைத்து எழுதிவிட்டேன்...' என்று நிருபர் கூறிய விளக்கத்தை எடிட்டர் ஏற்றுக் கொள்ளவில்லை. " நீ, ஏன் வயிற்றை பார்த்து எழுதுகிறார். செய்தி எடுக்கச் சென்றால் முகத்தை மட்டும் பார்த்து செய்தி எழுது...' என்று நீண்ட அட்வைஸ் கொடுத்து நிருபரை வறுத்தெடுத்தார்.
* கோவை முன்னாள் மேயர் ஒருவர் இமாச்சலபிரதேசத்திற்கு அலுவல் ரீதியான சுற்றுப்பயணத்தை முடித்து திரும்பினார். அவரை நிருபர் ஒருவர் போனில் தொடர்பு கொண்டு பயணம் எப்படி இருந்தது என்று கேட்க.... அந்த நிருபருடன் நன்கு பழக்கம் வைத்திருந்த மேயரும், இந்த பயணமே வேஸ்ட், லட்சக்கணக்கில் பணம் செலவானது தான் மிச்சம் என்று உண்மையை மறைக்காமல் கூறிவிட்டார். அப்புறம் என்ன நிருபரும், மேயரின் இமாச்சல பயணம் வேஸ்ட் என்று எழுதிவிட்டார். அவ்வளவு தான் மேயர் கிளம்பி நேராக நாளிதழ் அலுவலகத்திற்கு வந்துவிட்டார். எங்கோ அசைன்மென்டிற்கு சென்றிருந்த அந்த நிருபர் உடனடியாக வரவழைக்கப்பட்டார். எடிட்டர் முன்பு விசாரணை நடந்தது. "மேயர் தான் இதைக் கூறினார்... அதனால் எழுதினேன்...'இது நிருபர். "அவர் கூறினால், அதை அப்படியே எழுதிவிடுவதா?'இது எடிட்டர். "இவர் எழுத வேண்டாம் என்று கூறவில்லை'நிருபர். "நான் எழுதும்படி கூறவில்லை'மேயர். "என்னையா நீ செய்தி எழுதுகிறாய்... இரண்டு நாள் செய்தி எடுக்க செல்லவேண்டாம்...' இது எடிட்டர் அளித்த தண்டனை. "சில நேரங்களில் உண்மையை எழுதினாலும் தவறு தான்..' இது நீதி!

1 comment:

C.R.Jayaprakash said...

Reporting is forecasting the consequence of the NEWS too.