August 21, 2010

வீடியோ சுப்பிரமணியம் செய்தது சரியா, தவறா?

ஒரு மாதத்திற்கு முன்பு திருப்பூரில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கியதை வீடியோ எடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோ எடுத்து லஞ்சம் வாங்கியதற்கான ரசீதைக் கேட்ட வீடியோ சுப்பிரமணியத்தை போலீஸ் படை ஒன்று வந்து அள்ளிச் சென்றது. பிறகென்ன.. வீடியோ சுப்பிரமணியம் கடுமையாக தாக்கப்பட்டு போலீஸ்
லாக்கப்பில் அடைக்கப்பட்டார்.
திருப்பூர் துணைமேயர் மற்றும் சில பொது நல அமைப்புகளின் தலையீட்டால் வீடியோ சுப்பிரமணியம் என்கவுண்டரிலிருந்து தப்பினார் என்கிறார்கள் திருப்பூர்வாசிகள். வீடியோ சுப்பிரமணியத்தை கைது செய்ததும், மேற்கு மண்டல ஐஜி, திருப்பூர் எஸ்.பி. முதற்கொண்டு வீடியோ சுப்பிரமணியம் வீடியோ எடுத்து பிளாக் மெயில் செய்பவர் அதனால் கைது செய்துள்ளோம் என்று பேட்டியளித்தனர். சில பத்திரிக்கைகளில் அதுவும் பெரிதாக வெளியிடப்பட்டது. லஞ்சம் வாங்குபவர்களை கையும் களவுமாக வீடியோ எடுத்து அவர்களிடம் ரசீது கேட்கும் வீடியோ சுப்பிரமணி, வணிகவரி அதிகாரிகள் முதல் போலீஸ் அதிகாரிகள் வரை பலரை பிடித்திருக்கிறார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உயரதிகாரிகளுக்கும் முறைப்படி புகாரும் அனுப்பி வைத்திருக்கிறார்.
வணிக வரி அதிகாரிகள் மீது வேறு வழியின்றி உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் லஞ்சம் வாங்கி பிடிபட்ட போலீசார் மீது இதுவரை உயரதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுத்ததாக வரலாறு இல்லை. மாறாக வணிகவரித்துறை அதிகாரிகளிடம் புகாரைப் பெற்று வீடியோ சுப்பிரமணியத்தை ஏற்கனவே ஒரு முறை கைது செய்து தாக்கியதோடு, சிறையிலும் அடைத்தனர். சிறையிலிருந்து வெளியே வந்த பின்னரும் வீடியோ சுப்பிரமணியம் தன் நடவடிக்கையை விடவில்லை.
இது போலீஸ் அதிகாரிகள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊரில் யார் தவறு செய்தாலும் அதை கேள்வி கேட்டு தண்டனை கொடுக்கும் அதிகாரம் உள்ள போலீஸ்துறைக்கு, தனது துறையைச் சேர்ந்தவர்கள் தவறை, யாராவது தட்டிக்கேட்டால் பொறுக்கமுடிவதில்லை என்பதற்கு வீடியோ சுப்பிரமணியத்தின் மீதான போலீஸ் நடவடிக்கையே சாட்சி என்பதே என் கருத்து. வீடியோ சுப்பிரமணியம் பிளாக் மெயில் செய்தாரா இல்லையா என்ற விவகாரங்களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால் நேர்மையான எந்த அரசு ஊழியரும், அதிகாரிகளும் அவரைப்பார்த்து பயந்ததில்லை என்பதே திருப்பூர் அறிந்த உண்மை.
திருப்பூரில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் லஞ்சம் புறையோடிக்கிடக்கிறது. திருப்பூரில் பணியாற்றும் வாய்ப்பிற்காக பலர் பல லகரங்களை செலவு செய்ய முண்டியடிக்கின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கே பல முக்கியத்துறைகளிலிருந்து பட்டுவாடா நடக்கிறது என்பதும் ஊரறிந்த உண்மை. இந்த நிலையில் தங்களது முதலீட்டை பல மடங்காக திரும்ப பெற வேண்டும் என்ற வெறியில் வரும் அதிகாரிகளுக்கு வீடியோ சுப்பிரமணியம் முட்டுக்கட்டை போடுகிறார் என்பதும் திருப்பூர்வாசிகளுக்குத் தெரியும்.
வீடியோ சுப்பிரமணியத்தின் மீது பத்திரிக்கைதுறையில் இருக்கும் பல நண்பர்களுக்கும் கோபம் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் வீடியோசுப்பிரமணியம் ஒரு குறிப்பிட்ட சில பத்திரிக்கைகளுக்கு மட்டும் செய்தியை அளிக்கும் மனம் படைத்தவராக இருந்தார். தான் எடுக்கும் வீடியோ, அரசியல் ஆதாயங்களுக்காகவோ, அல்லது பணம் சம்பாதிக்கவோ பயன்படுத்தப்பட்டுவிடாக்கூடாது என்ற எண்ணம் கூட அவருக்கு இருந்திருக்கலாம்.
நான் கூட இரண்டொரு முறை தான் அவரை சந்தித்திருக்கிறேன். பல செய்திகளை எழுதியிருக்கிறேன். எனது அனுபவத்தில் வைத்து, வீடியோ சுப்பிரமணியத்தின் நடவடிக்கையால் பல ஊழல் அதிகாரிகள் கிலி பிடித்து திரிந்துவருகின்றனர் என்பதும், இதுவரை வீடியோ சுப்பிரமணியம் பிளாக் மெயில் செய்தார் என்று ஒரு புகார் கூட வரவில்லை என்பதும் உண்மை. பிளாக்மெயில் புகார் வந்திருந்தால் போலீசார் அதன் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்யாமல் இருந்திருப்பார்களா?
வீடியோ சுப்பிரமணியம் கைது குறித்து பேட்டியளித்த உயரதிகாரிகள், பிளாக் மெயில் புகார் ஒன்றை கூட ஆதாரமாக காட்டவில்லை... எது எப்படியோ லஞ்சம், ஊழலால் அனுதினமும் மக்கள் அல்லல்படுகின்றனர்.
சமூகத்தில் நடக்கும் குற்றங்களை தட்டிக்கேட்க, தடுக்க தனி மனிதனுக்கு நமது அரசியலமைப்புச் சட்டம் முழு சுதந்திரம் அளித்திருக்கிறது. ஆனால் அதைப்பயன்படுத்தி ஊழலை தடுக்க தனிமனிதன் முயன்றால், அவனை குற்றவாளியாக்கி, சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தும் கோரம் தான் நடக்கிறது. ஆனாலும் லஞ்சத்திற்கு எதிராக போராடவேண்டும் என்ற எண்ணம் சாதாரண மக்களிடம் ஏற்பட்டிருப்பதை யூடியுப்பில் பெண் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கிய வீடியோவை வெளியிட்ட இரு வாரங்களுக்குள் அதை 5000 க்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருப்பதிலிருந்தும், வீடியோ சுப்பிரமணியத்தை ஆதரித்து கருத்து வெளியிட்டிருப்பதிலிருந்தும் அறிய முடிகிறது.

3 comments:

Anonymous said...

if we were in Singapore, what he did is right.
But he is in Great India, so he did wrong. He must know the reality of living condition in India.
An ordinary people must scarifies more when compare to influence persons here during their normal life.
So the rules can be bend to the maximum for rich & influence people. This is not possible in Singapore like countries.
( My dear friend, these social subject needs more time to discuss..Sorry for my brief note)

reg,

Mutharasu
Zigma,Erode.

Anonymous said...

why did u meet hime 2 times for what purpose can u say that

Unknown said...

உங்கள் கருத்து பதிவுக்கு நன்றி....நண்பரே!
வீடியோ சுப்பிரமணியத்தை நான் எதற்கு சந்தித்தேன் என்பதற்கான பதில் அடுத்த வரியிலேயே இருக்கிறது... எனது சில பதிவுகளால் உங்களுக்கு மிகப்பெரிய வருத்தம் ஏற்பட்டிருக்கிறது என்று கருதுகிறேன். எதுவாக இருந்தாலும் உங்கள் பெயருடன் கருத்தை பதிவு செய்யுங்கள். நீங்கள் ஒளிந்து கொண்டு தெரிவித்த கருத்துக்களை நான் வெளியிட்டிருக்கிறேன்.