September 18, 2010

பிளாஷ்டிக் தயாரிப்பது... பயன்படுத்துவது... எது குற்றம்?

கோவை மாவட்ட ஆட்சியர் உமாநாத், மாநகராட்சி கமிஷனர் அன்சுல்மிஸ்ரா, மேயர் வெங்கடாச்சலம் உள்ளிட்டோர் ஜெர்மனி நாட்டில் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு வந்து 16.09.10 அன்று பேட்டியளித்தனர். ஜெர்மனி மக்களின் ஒத்துழைப்பால் மாநகராட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது என்பதையே மூவரும் திரும்ப திரும்ப வலியுறுத்தி கூறினர். நமது நாட்டில் மாநகராட்சி திட்டங்கள் பலன் தராமல் போவதற்கு மக்களே காரணம் என்பது போலிருந்தது அவர்களது கருத்து. பிளாஷ்டிக் பொருட்களை கோவையில் தடை செய்தீர்கள், ஆனால் அதை தீவிரமாக அமல்படுத்தவில்லை. இதற்கும் மக்கள் தான் காரணமா? என்று நான் கேட்டதற்கு கமிஷனர் அன்சுல்மிஸ்ரா, பிளாஷ்டிக் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது, 20 மைக்ரான் அளவிலான பிளாஷ்டிக் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று மழுப்பலாக பதில்
கூறினார். அவரை இடைமறித்து கோவை கலெக்டர் உமாநாத் அளித்த பதில் தான் சூப்பர்...."பிளாஷ்டிக் பொருட்களின் உற்பத்தியை தடை செய்துவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நாம் தவறாக கருதுகிறோம். பிளாஷ்டிக் பொருட்களை பயன்படுத்திவிட்டு அதை எப்படி டிஸ்போஸ் செய்கிறோம் என்பது தான் முக்கியமானது. பிளாஷ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது. (தயாரிப்பதை தடுக்கவும் முடியாதோ?) இப்போதெல்லாம் மக்கள் துணிப்பையை எடுத்துக் கொண்டு மளிகைக்கடைக்கோ, தூக்குப்போசியை எடுத்துக் கொண்டு சிக்கன் வாங்குவதற்கோ வருவார்களா? நாம் தான் அப்படி செல்வோமா? ஆனால் பிளாஷ்டிக் பொருட்களை பயன்படுத்தும் மக்கள் அதை மக்காத குப்பை என்று தனியே பிரித்து போடவேண்டும்....' என்று பிளாஷ்டிக் பொருட்களின் மீதான தடை தேவையற்றது என்று பொருள்பட பேசினார். நிருபர்களுக்கு இது ஆச்சரியத்தை அளித்தது. நீலகிரி போன்ற ஒரு சில மாவட்டங்களில் பிளாஷ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான மக்களிடம் பிளாஷ்டிக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதைத் விட சில நூறு தயாரிப்பாளர்களை பிளாஷ்டிக்கிற்கு மாற்றுப்பொருள் தயாரிக்கச் செய்யலாம். துணிப்பைகள், காகிதப்பைகள் போன்றவற்றை மானிய விலையில் மக்களுக்கு விநியோகிப்பதன் மூலம் விசைத்தறி தொழில் மேம்பாடு அடையும். வீணாகும் காகிதங்களும் பயன்படுத்தப்படும். இதுபோன்ற ஆலோசனைகளை சாதாரண மக்களே அரசுக்கு தெரிவிக்கும் போது ஐஏஎஸ் படித்த அதிகாரிகள் மட்டும் ஒரு சில பிளாஷ்டிக் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாகவே பேசிவருவது தான் ஆச்சரியமளிக்கிறது.

No comments: