
கோவையைச் சேர்ந்த முன்னணி மருத்துவர் அவர். கோயில் ஒன்றில் சக நண்பருடன் சென்ற போது சந்தித்தேன். ஜாலியாக பேசிக் கொண்டிருந்த டாக்டர், திடீரென வருத்தத்துடன் பேச ஆரம்பித்தார்... அவரது பேச்சு நாட்டின் மீது பற்றுக் கொண்ட திருவாளர். பொதுஜனத்தின் ஆழ் மனதை எதிரொலித்தது. "தமிழ்நாடு அரசின் கோபுரச் சின்னத்தை மாற்ற வேண்டும் என்று எம்எல்ஏ ஒருவர் சட்டசபையில் பேசியிருக்கிறார். அரசு அதை மாற்றினாலும் மாற்றிவிடும். நமது அரசியல்வாதிகளுக்கு எதை எதையெல்லாம் அரசியல் ஆக்குவது என்று விவஸ்தையே இல்லை. மாநிலத்தின் சின்னமாக கோயில் கோபுரம் இருப்பதை மற்ற மதத்தினர் யாரும் இதுவரை எதிர்க்கவில்லை. அண்மையில் எகிப்து நாட்டிற்கு சென்றிருந்தேன். அந்த நாட்டில் தற்போது முழுக்க முழுக்க முஸ்லீம்கள் தான் வசிக்கின்றனர். ஆனாலும் அங்கு கட்டப்பட்டுள்ள பிரமீடுகளை எங்களது மூதாதையர்கள் கட்டியது என்று பெருமை பொங்க குறிப்பிடுகின்றனர். அவர்களது மூதாதையர்கள் வேறு வழிபாட்டு முறையை பின்பற்றியவர்கள். இருந்தாலும் மூதாதையர்களின் கலாச்சாரத்தை, பண்பாட்டை மதிக்கின்றனர். அதற்கு காரணம், அவர்களது நாட்டு பற்றுதான். ஆனால் நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கு மக்கள் மீதோ, தேசத்தின் மீதோ பற்று இருப்பதில்லை....' என்று வருத்தமாக குறிப்பிட்டவர் தொடர்ந்தார்...."நாட்டில் முதலில் அதிகாரிகள் ஊழல்வாதிகள் ஆனார்கள் பின்னர் அரசியல்வாதிகள் ஊழல் செய்தனர். நீதித்துறையே ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறது. இதையெல்லாம் கூட பொறுத்துக் கொள்ளலாம்... ஆனால் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் பொதுமக்களை ஊழல்வாதிகளாக்கிவிட்டனரே.... இதை என்னவென்பது?' என்றார். அதிகாரிகள் ஊழல் செய்யும் போது, பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.... அரசியல்வாதி ஊழல் செய்யும் போதும் அவர்களை நம்பி ஓட்டளித்த மக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். நீதித்துறையில் ஊழல் என்றால் வழக்குத் தொடுத்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதைப்போல பொதுமக்கள் ஊழல் பேர்வழிகளானால்..., அதில் பாதிக்கப்படுவது ஓட்டுக்காக அவர்களை சார்ந்திருக்கும் அரசியல்வாதிகள் தான்... கவலைப்படாதீர்கள் டாக்டர்....விரைவில் பொதுமக்களால் அரசியல்வாதிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகும்...என்ற ஆறுதல் பட்டுக் கொள்ளலாம்.
1 comment:
Sir, Really Nice and True....
Post a Comment