May 9, 2015

இவர்களும் மனிதர்கள் தான்!

அதிகாலை 4 மணியிலிருந்து வரிசை கட்டி காத்திருந்தது கூட்டம். ஏற்கனவே தலா 100 ரூபாய் கட்டி விண்ணப்பம் வாங்கியாகிவிட்டது. ரிசல்ட் வந்ததும் முதலில் விண்ணப்பத்தை கொடுக்க வேண்டும். கேட்டை மட்டும் திறந்து வைத்துவிட்டது நிர்வாகம்.. 10 மணிக்கு ரிசல்ட் வந்ததும், மதிப்பெண் பட்டியலுடன் விண்ணப்பத்தை வழங்க வேண்டும். அதற்கு டோக்கன் உண்டு.. டோக்கன் ஓசியில்லை... அதற்கும் 10 ரூபாய் அழ வேண்டும். பரபரப்பான அவினாசி ரோடு டிராபிக் ஜாம் ஆகியது. அரசு சம்பளம் பெறும் போலீசார் வியர்க்க விறுவிறுக்க போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர். கல்லா கட்டும் கல்லூரி நிர்வாகத்திற்கு அது குறித்தெல்லாம் அக்கறையில்லை.
அடித்துப்பிடித்து விண்ணப்பங்களை கொடுத்துவிட்டு ஓய்ந்த பெற்றோரிடம் கல்லூரி அலுவலர் ஒருவர் வந்து சொன்னார் கூலாக...‘மெரிட் சீட் என்பது ஒரு பாடப்பிரிவுக்கு 2 அல்லது 3 பேருக்குத் தான். அது யாருக்கு கிடைக்கும்னு இப்போ சொல்லமாட்டோம்... பணம் கட்டி சீட் வாங்க விரும்பறவங்க... பணத்தைக்கட்டி சீட் வாங்கிக்குங்க....’
அதிர்ந்து போன பெற்றோர், ‘அதிகாலை 4 மணியிலிருந்து காத்திருந்தது?’ என்று கேட்க... ‘நாங்களா வரச்சொன்னோம்?’ என்று எகத்தாளமாக கேட்டுவிட்டு, பணப்பெட்டியுடன் வருபவர்களை வரவேற்க ஓடினார் அந்த அலுவலர்.
புள்ளை நல்ல மார்க் எடுத்திருக்கான்.... சீட் கிடைச்சிடும் என்று நம்பி வந்த அப்பாவி பெற்றோர்... ‘அடப்பாவிகளா’ என்று கூறிவிட்டு நடையை கட்டுவதைத்தவிர வேறு வழியிருக்கவில்லை....

விண்ணப்பங்களை விற்றது மூலம் கோடிகள்... டோக்கன் கொடுத்ததில் கூட லட்சங்கள் குவித்த அந்த கல்லூரி நிர்வாகத்தை சில மாதங்களுக்கு முன்பு சாப்ட்வேர் டெவலப்மன்ட் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் அணுகி, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியை உங்கள் கல்லூரிக்கு செய்துவிட்டால், நெரிசல் குறையுமே என்று கேட்டார்... அதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் சொன்ன பதில்... விடியக்காலை 2 மணியிலிருந்து குவியும் கூட்டம்... விமானநிலையத்திலிருந்து ஹோப்காலேஜ் வரை ஏற்படும் டிராபிக் ஜாம்... இது தான் எங்கள் கல்லூரியில் சீட் கிடைப்பது குதிரைக் கொம்பு என்ற தோற்றத்தை தருகிறது... நாங்கள் ஏன் இதை இழக்க வேண்டும்...?

இவர்களும் மனிதர்கள் தான்! 

No comments: